'பூலோக வைகுண்டம்' எனப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் அனைத்து நாள்களும் திருவிழாக்கோலம்தான். எனினும், மார்கழி மாதத்தில் நடைபெறும் 'வைகுண்ட ஏகாதசி திருவிழா' மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஆராத அருளமுதம் பொதிந்ததாகவும், தீராத வினைகள் தீர்க்கும் கோயிலாகவும் விளங்கும் இங்கு வைகுண்ட ஏகாதசி விழா 'திருமொழித் திருநாள் (பகல் பத்து)- திருவாய்மொழித் திருநாள் (இராப்பத்து)' என அழைக்கப்பட்டு, ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள் பாடப் பெற்று 'தெய்வத் தமிழ் விழாவாக' நடைபெறுகிறது.
ஆழ்வார்களில் மதுரகவி ஆழ்வாரைத் தவிர, மற்றவர்கள் அரங்கனைப் போற்றி மகிழ்ந்துள்ளனர். ஆண்டாள், திருப்பாணாழ்வார் ஆகிய இருவரும் அரங்கனோடு ஒன்றிய பெருமையும் உடையது இத்தலம். அதிகமான பாசுரங்களைப் பாடி அரங்கனைப் போற்றி மகிழ்ந்தவர் திருமங்கையாழ்வார்.
'எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே' என்று சொல்லி திருமங்கையாழ்வார் பெருமாளின் தரிசனம் பெற்றதைப் பேசும் 'திருநெடுந்தாண்டகம்' எனும் பிரபந்தம் திருவிழாயில்; முதல்நாளன்று அருளப்
படுகிறது.
பகல்பத்து எனப்படும் திருமொழித் திருநாள் கோயிலில் அர்ச்சுன மண்டபத்தில் நடைபெறும். முதல் இரண்டு நாள்களில் பெரியாழ்வார் அருளிய பெரியாழ்வார் திருமொழி பாசுரங்களும், மூன்றாம் நாள் ஆண்டாள் அருளிய திருப்பாவை நாச்சியார் திருமொழியும், நான்காம் நாள் பெருமாள் திருமொழி திருச்சந்தவிருத்தம் பாசுரங்களையும், ஐந்தாம் நாள் தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிய திருமாலை திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களையும் திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிப்பிரான் பாசுரங்களையும், ஆறாம் நாள் மதுரகவி ஆழ்வார் அருளிய 'கண்ணி நுண் சிறுதாம்பு' பாசுரங்களையும், திருமங்கையாழ்வார் அருளிய 'பெரிய திருமொழி' பாசுரங்களையும், 7, 8, 9-ஆம் நாள்களில் பெரிய திருமொழியும், பத்தாம் நாள் பெரிய திருமொழி பாசுரங்களும், திருகுறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் பாசுரங்களையும் நம் பெருமாள் முன்பு அரையர்கள் அபிநயத்துடன் வியாக்யானம் செய்வர்.
பத்தாம் நாளன்று பெருமாள் நாச்சியார் கோலத்தில் (மோகினி அலங்காரம்) உலா வரும் காட்சி அற்புதமானது. மனதை ஈர்க்கும் வண்ணம் அழகிய அலங்காரத்துடன் ஒய்யாரமாக அமர்ந்து அருள் வழங்கும் கோலம் தனிச்சிறப்புடையது.
திருவாய்மொழித் திருநாள் எனப்படும் இராப்பத்து திருநாளில் முதல் நாளில் நடைபெறும் 'வைகுண்ட ஏகாதசித் திருவிழா' மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.
இந்த வைபவம் அனைத்து வைணவத் தலங்களில் நடைபெற்றாலும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழா தனிச்சிறப்பு உடையது.
பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்துடன் கிளிமாலையை அணிந்து அதிகாலை 'பரமபத வாசல்' எனப்படும் சொர்க்கவாசலைக் கடந்து வந்து திருமாமணி மண்டபம் சென்று பக்தர்களுக்கு காட்சி தந்து அருளுகிறார். இதைக் காண கண்கோடி வேண்டும். ஏழாம் திருநாள் திருக்கைத்தல சேவை, எட்டாம் நாள் திருமங்கை மன்னன் வேடுபறி வைபவங்கள் நடைபெறுகின்றன.
பத்தாம் நாளன்று சிறப்பான நிகழ்ச்சியாக 'நம்மாழ்வார் மோட்சம்' நடைபெறுகிறது. 'அரவணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்ணன்' என நம்மாழ்வார் தமது பாசுரத்தில் அரங்கனை போற்றுகிறார். சடகோபர் என்ற திருநாமம் கொண்ட இவர் பெருமாளால் 'நம் ஆழ்வார்' என அபிமானித்து அழைக்கப்பட்டார்.
விழாயில்; அரங்கன் திருவடிகளில் அமர்ந்து 'நம்மாழ்வார் மோட்சம்' எனும் வைபவம் இவருக்கு சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த வைபவத்தில் பெருமாள் தமது மாலை கஸ்தூரிதிருமண்காப்புகளை அவருக்கு அளிக்கும் காட்சி அற்புதமானது. தன்னை சரண் அடைந்தவர்களுக்கு இறைவன் தன்னையே அளிப்பான் என்பது விழாவின் தத்துவமாக விளங்குகிறது.
பக்தி மணம் பரப்பும் செந்தமிழ் மலர்களாக ஆழ்வார் அருளிய பாசுரங்கள் விளங்குகின்றன. வைகுண்ட ஏகாதசித் திருவிழாவில் பெருமாள் முன்பு பாசுரங்களை அரையர்கள் பாடி அபிநயம் செய்கின்றனர். இதை 'அரையர் சேவை' எனக்கூறுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.