வனமும் வாழ்வும்!
இந்திய வனவிலங்குகள் பற்றி ஆங்கிலேயர்களின் ஆவணங்கள்
இந்திய வனவிலங்குகள், பறவைகள் குறித்து ஆங்கிலேயர்கள் மேற்கொண்ட பணி, திரட்டிய விவரங்கள் போன்றவை இந்திய இயற்கை வரலாறு பற்றி நாம் அறியும் ஆவணங்களில் முக்கியமானதாக இருக்கின்றன.
முந்நூறு ஆண்டுகளில் நம் நாட்டு உயிரினங்கள் பற்றி அவர்கள் முழுமையான ஒரு மதிப்பீட்டை களப்பணி வாயிலாகச் செய்திருக்கின்றனர். இதுமட்டுமின்றி, புள்ளினங்களையும் விலங்குகளையும் கவனித்து அவற்றின் இயல்புகளை, செயல்பாடுகளைப் பதிவு செய்தனர். ஏதாவது ஒரு உயிரினம் பற்றி நம்பகமான தகவலைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், ஆங்கிலேய அலுவலர்கள் சிலர் எழுதிய நூல்களையே நாம் நாட வேண்டி இருக்கிறது.
இந்தியப் பறவைகள் பற்றி அறிய விரும்புவோர் டக்ளஸ் திவார், இஹா, பின், விஸ்வர், பிளட்சர், இங்லிஸ் போன்ற அலுவலர்களைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாது. இதில் பலர் ஐ.சி.எஸ். போன்ற உயர் பதவிகளில் இருந்தவர்கள்.
Advertisement
வன விலங்குகளைப் பற்றி அறிய வேண்டும் என்றாலும், இதே வழிதான். அவற்றின் வாழிடங்கள் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் கவனித்துத் துல்லியமாகப் பதிவு செய்ததும் உயர் பதவிகளில் இருந்த ஆங்கிலேய அலுவலர்கள்தான்.
ஆங்கிலேய அரசின் பணியில் இல்லாமல் காட்டுயிர் பற்றிய அறிய குறிப்புகளை எழுதியவர் ஜி.பி.சாண்டர்சன். இவர் மைசூரு சமஸ்தானத்தில் வேலையில் இருந்தார். இந்தியாவில் வேலை பார்த்த டன்பர், பிராண்டர், சேம்பியன், வார்டிரா போன்றவர்கள் தங்களது ஓய்வு நேரத்தில் வன உயிர்களைப் பற்றி எழுதி வைத்திருந்தனர். இவர்கள் எழுதியிருக்காவிட்டால், அந்தத் துறை பற்றிய முக்கியத் தகவல்கள் நமக்குக் கிடைக்காமல் போய் இருக்கும்.