புள்ளிகள்
1965-ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த், மருத்துவராக நடித்து பெரியளவில் பேசப்பட்டார்.
1965-ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை' திரைப்படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த், மருத்துவராக நடித்து பெரியளவில் பேசப்பட்டார். ஜெயலலிதாவோடு முதல் ஜோடியாக நடித்தவரும் இவர்தான்.
இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீகாந்த் வில்லன், குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றார். சுமார் ஐம்பது படங்களில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.
ஈரோட்டிலே பிறந்த அவர், அமெரிக்கத் தூதரகத்திலே பணிபுரிந்த போது கே.பாலசந்தரால் மேடை நடிகராகப் பிரபலமடைந்தவர் வெங்கி என்கின்ற இந்த ஸ்ரீகாந்த்.
Advertisement
பாலசந்தரின் 'மேஜர்காந்த்' என்ற நாடகத்தில் ஸ்ரீகாந்த் என்ற பாத்திரத்தின் பெயரையே திரைப்படத்தில் அறிமுகமானபோது, அந்தப் பெயரையே சூட்டிக் கொண்டார்.
வறுமையின் கோரப்பிடியிலே சிக்கி வாலியும் நாகேஷும் கஷ்டப் பட்ட காலத்தில் ஸ்ரீகாந்த் தன் கையால் சமைத்துப் போட்டு, மாம்பலம் கிளப் ஹவுஸில் இருவரையும் ஆதரித்தார்.
கதாநாயகனாக சில படங்களில் நடித்தாலும் பின்னாளில், சிலநேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தனின் கதை, ராஜநாகம் போன்ற படங்களில் முத்திரைப் பதித்தவர்.
- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
1924-இல் ஜெகந்நாத ஐயர் நாடகக் குழுவினர் 'கதரின் வெற்றி' என்ற நாடகத்தை அமர்க்களமாக நடத்தினர். இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக, மகாத்மா காந்தி, கஸ்தூரிபாய், சீனிவாச ஐயங்கார், மூதறிஞர் ராஜாஜி உள்ளிட்டோர் வந்திருந்தனர். இந்த நாடகத்தில் பன்னிரெண்டு வயது சிறுவன் 'பாயசம்' என்ற வேடத்தில் நடித்திருந்தார்.
நாடகம் முடிந்தவுடன் 'பாயசம்' என்ற வேடத்தில், நடித்த சிறுவனை அழைத்து பாராட்டினார் ராஜாஜி. அந்தச் சிறுவன் தான் பிற்காலத்தில் எல்லோராலும் 'நடிகவேள்' என்று புகழப்பட்ட எம்.ஆர்.ராதா.
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
இயக்குநர் பாரதிராஜா அறிமுகப்படுத்திய பாடகி தேனி குஞ்சரத்தம்மாள். 'காதலன்' படத்தில் 'பேட்ட ராப்; பாடலும், 'முத்து' படத்தில் 'கொக்கு சைவ கொக்கு பாடலும் இவர் பாடியவை. இன்றும் ரசிகர்களால் முணுமுணுக்கப்படுபவை.
பல்வேறு புராண, இதிகாச, இலக்கியங்களைக் கவிஞர் கண்ணதாசன் ஆழ்ந்து அறிந்தவர். ஒரு சில படங்களில் ஓரிரு வரிகள் மட்டும் அந்தத் தாக்கமும் பாதிப்பும் பளிச்சிடும்.
காலங்களில் அவள் வசந்தம் (பகவத் கீதை), தோள் கண்டேன் தோளே கண்டேன் (கம்பன்), நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை (கம்பன்), அன்றொரு நாள் இதே நிலவில் (பாரி மகளிர்), உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே (குறள்), ஆட்டு வித்தால் யாரொருவர்ஆடா தாரே கண்ணா (வள்ளலார்), கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா (அருணகிரிநாதர்), வாயின் சிவப்பை விழிவாங்க மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்க (கலிங்கத் துப்பரணி).
- தங்க.சங்கரபாண்டியன்,பொழிச்சலூர்.