'சாண்டா குரூஸ் டெல் இஸ்லோட்' என்பது வடக்கு கொலம்பியாவில் உள்ள பொலிவா டிபார்ட்மென்ட் கடற்கரையில் உள்ள ஒரு செயற்கை தீவு. சான் பெர்னார்டோ தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியான இந்தச் செயற்கைத் தீவில், சுமார் 600 பேர் வசிக்கின்றனர். ஆனால் புவியின் மிக அதிக அடர்த்தியான தீவு.
மொத்த இடமே மூன்று ஏக்கர்தான். 200 மீட்டர் நீளமும், 120 மீட்டர் அகலமும் கொண்டது. வடக்கு கொலம்பியா கடற்படையால் பாதுகாக்கப்படுகிறது.
இங்கு வசிப்போரில் பெரும்பாலானோர் ஆப்ரோ கொலம்பியர்கள். தீவில் காவல் துறையினர் கிடையாது. குற்றமோ, வன்முறையோ இல்லை. மின்சாரத்துக்கு பெரும்பாலும் சோலார் பேனல்களை பயன்படுத்துகின்றனர். சுத்தமான குடிநீர், உணவுப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து வருகின்றன.
இந்தத் தீவு குறித்து மேலும் வியப்பான தகவல்கள் என்ன தெரியுமா?
தீவில் சுறுசுறுப்பான தெரு உள்ளது. இளைஞர்கள் ராப் இசை கேட்கின்றனர். கால்பந்து விளையாட்டு உண்டு. தற்போது இன்டர்நெட் வசதி வந்து விட்டது. தீவில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள். மொத்தம் நான்கு முக்கிய சாலைகள். அளவில் குறுகலானவை .இதனால் கார், மோட்டார் பைக் கிடையாது. வீட்டின் கதவுகள் பூட்டப்படுவதில்லை. மிக சிறியது என்பதால், தன்னாட்சி கிடையாது.
மொத்த ஜனத் தொகையில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள். 20 பேர் வரை பயில ஒரு பள்ளி உள்ளது.
1860-ஆம் ஆண்டு வரையில் யாரும் இங்கு குடியேறவில்லை. மற்ற பகுதி மீனவர்கள் அவ்வபோது வந்து ஓய்வு எடுப்பர். புயல் சமயங்களில் ஒதுங்குவர்.
பிறகு மீனவர்கள் குடியேற ஆரம்பித்தனர். ஒரு சமயம் ஒரு சிமென்ட் சிலுவை கரை ஒதுங்கியது. அதனை எடுத்து தீவின் மையத்தில் வைத்தனர். சிலுவையை இங்கு 'குரூஸ்' என அழைப்பர். இங்கு ஒரு சிறிய மீன்காட்சி சாலை உள்ளது. இதில் ஆமைகள், மீன்கள், சிறிய சுறா மீன்கள் பாதுகாக்கப்படுகின்றன.
சிறிய துறைமுகம் உண்டு. இந்தச் செயற்கைத் தீவைப் பார்க்க தினமும் ஐநூறு சுற்றுலாப் பயணிகள் வரை வந்து செல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.