குட்டி குட்டி கதைகள்
மனைவி சோகத்துடன் இருந்த கணவனிடம், 'என்னங்க.. நமக்கு திருமணமாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பரிவு...
மனைவி சோகத்துடன் இருந்த கணவனிடம், 'என்னங்க.. நமக்கு திருமணமாகி 33 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒருநாளும் இப்படி நீங்கள் சோகமாக இல்லையே..?' என்றாள். அதற்கு கணவன், 'எனது அண்ணன் இப்போதெல்லாம் என் மீது கோபப்படுவதில்லை. கண்டிப்பதில்லை. ஏது ஏன் என்று தெரியவில்லை.
அதனால் இவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிவிட்டேன்' என்றார். அப்போது குறுக்கிட்ட ஐந்து வயது பேரன் மகேஸ்வரன் தனது மழலை மொழியில், 'தாத்தா.. நான் சொல்றேன்.. அவர் உங்களைத் தம்பியா பார்க்கலை.. இரண்டு மருமகன்களின் மாமனாராகப் பார்க்கிறார். அதான் திட்டலை' என்று கூறி, சுருக்கென்றது அவருக்கு.
சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.
மனிதம்..
சட்டைப் பையைத் தடவியபடி, 'ஓர் இட்லி எவ்வளவு' என்று கேட்டு விட்டு உள்ளே நுழைந்தார் ஒரு முதியவர். அவரது வறிய முகம் கண்ட ஓட்டல் முதலாளி ராமசாமி பாதி விலையைச் சொன்னார். உள்ளே வரவழைத்து அமர வைத்தார்.
தானே முதியவருக்கு பரிமாறி, வலுக்கட்டாயமாக வயிராற சாப்பிட வைத்தார் ராமசாமி. சட்டைப் பையில் தன்னிடம் இருந்த சில ரூபாய்களைத் தேடி எடுத்து கொடுத்த முதியவரிடம் பணம் வேண்டாம் என்று சொல்லி, இரு கரம் கூப்பி வழியனுப்பி வைத்தார்.
'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்' என்ற பெருமிதத்துடன் பணியைத் தொடங்கினார் ராமசாமி.
த.நாகராஜன், சிவகாசி.
கடன்...
கடன் கொடுத்த ஒருவர் கடனை வசூலிக்க ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்த பெண்ணிடம், 'ஏம்மா.. உன் வீட்டுக்காரன் இருக்கிறானா?' என்றார்.
'இல்லீங்கோ.. அவர் வெளியே போயிருக்கிறார்...' என்றாள்.
'நான் இப்போதான் அவரை ஜன்னல் வழியாகப் பார்த்தேன்...'
'அவரும் உங்களைப் பார்த்தாரு.. அதனால் வெளியே போனதா உங்களிடம் சொல்லச் சொன்னார்' என்று கூற, கடன் வசூலிக்க வந்தவர் பதில் பேச முடியாமல் திணறினார்.
நெ.இராமகிருஷ்ணன், சென்னை74.