மனம் கவர்ந்த மனோரா
காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது, மனோரா.
காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது, மனோரா.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து தெற்கு 20 கி.மீ. தொலைவில் பேராவூரணியில் இருந்து கிழக்கே 10 கி.மீ. தூரத்திலும் சரபேந்திராஜன் பட்டினம் எனும் ஊரில் அமைந்துள்ளது மனோரா. இது மல்லிப்பட்டினம் எனும் ஊரில் வாழும் இஸ்லாமியரின் மீன்பிடித் துறைமுகமாக விளங்கியது.
மனோரா என்னும் சிறப்புப் பெயர் பெற்ற இந்த இடத்தை ஆழமாக விவரித்து எழுதியுள்ளார், தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை இயக்குநர்.
Advertisement
மனோரா என்பது மினாரட் எனும் மராத்தி சொல்லின் திரிபாகும். இதற்கு தமிழில் நிலை மாடம் எனும் பொருளும் உண்டு. நெப்போலியனின் வீழ்ச்சிக்கு இந்த இடம் அடித்தளமாக அமைந்ததாலும், தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னன் அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், தனக்கும் பிரிட்டிஷ் அரசுக்கும் உள்ள நட்பை உலகுக்கு எடுத்துக் காட்டவும் பிரஞ்சுக்காரர்களின் தோல்விக்கு நிரந்தர நினைவுச் சின்னமாக 1814-இல் ஒரே ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டதுதான் இந்த மனோரா.
நூறடி உயரம் கொண்டதும், ஏழு அடுக்குகளை உடையதுமான இந்தக் கட்டடம் அடிமட்டத்திலிருந்து நுனிவரை சுற்றளவு குறைந்து கொண்டே வந்து தலைப்பகுதி சிறுத்துக் காணப்படுகிறது. ஏழு அடுக்குகளும் அறுகோணப் பட்டையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வணிகப் பொருள் வைக்கும் துறை, ராணுவப் பயிற்சி மைதானம், கப்பல் கட்டும் தளம் உள்ளிட்டவற்றோடு எதிரிகள் நுழைந்து விடாதவாறு சுற்றிலும் முதலைகளைக் கொண்ட பெரிய அகழிகளும் உள்ளன.
மனோராவுக்கும் தஞ்சை அரண்மனைக்கும் சுரங்க வழி இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் தற்பொழுது ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு போன்ற காலங்களில் இப்பகுதி மக்கள் இங்கு கூடுகின்றனர். இது 'குளோபல் வில்லேஜ்' ஆக மாற, தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை தன் வசமாக்கிக் கொண்டுள்ளது.