முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: நகச் சுற்று குணமாக...

என் விரல் நகத்தின் சுற்றுப் பகுதி சில நாள்களாக சிவந்து, வீக்கத்துடன் வலிக்கிறது. தொட்டால் சூடாகவும், மென்மையாகவும் உணரப்படுகிறது.

Updated On : 1 மார்ச், 2026 at 4:09 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:35 PM

என் விரல் நகத்தின் சுற்றுப் பகுதி சில நாள்களாக சிவந்து, வீக்கத்துடன் வலிக்கிறது. தொட்டால் சூடாகவும், மென்மையாகவும் உணரப்படுகிறது. இப்போது அந்த இடத்தில் சின்ன புண் மாதிரி உருவாகி, சீழ் நிரம்பிய புடைசுருள் போலத் தெரிகிறது. இதற்கு ஆயுர்வேத மருந்து உள்ளதா?

-கல்யாணி, கரூர்.

நகச் சுற்று வீக்கம் (பரோனைகியா) என்பது நகத்தின் அருகிலுள்ள தோலில் ஏற்படும் ஒரு தொற்று நிலையாகும். நகத்தைக் கடித்தல், ஆழமாக வெட்டுதல், சிறு காயம், அடிக்கடி தண்ணீரில் வேலை செய்தல் அல்லது ரசாயனப் பொருள்களுடன் தொடர்பு போன்ற காரணங்களால் தோல் பாதுகாப்பு அடுக்கு சேதமடைகிறது. அந்தச் சிறு இடைவெளி வழியாக கிருமிகள் உள்புகும்போது, அங்கு அழற்சி உருவாகிறது.

Advertisement

இதன் விளைவாக சிவப்பு, வீக்கம், சூடு, துடிப்பு, வலி போன்ற அறிகுறிகள் தோன்றும். சில நேரங்களில் அந்தப் பகுதியில் சீழ் தேங்கி, புண் உருவாகவும் வாய்ப்புள்ளது.

ஆயுர்வேத நூல்களில் நகச் சுற்று வீக்கம் 'குனகா' என நேரடியாக விவரிக்கப்படுகிறது. 'குன்' என்பது தீங்கு, 'நகா' என்பது நகம். நகப்பகுதியில் தோன்றும் தீவிர அழற்சி மற்றும் புண் நிலையைக் குறிக்கும் பெயரே இது.

நகச் சுற்று வீக்கம் பொதுவாக இரண்டு நிலைகளில் காணப்படுகிறது.

திடீர் (அகால) நிலை மற்றும் நீண்டகால நிலை.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 8:35 PM

திடீர் நிலை: நகத்தின் அருகே திடீரென சிவப்பு, வீக்கம் மற்றும் தொடும்போது சூடு, துடிப்பு வலி, சில நேரங்களில் சீழ் நிரம்பிய புண் உருவாகுதல்.

நீண்டகால நிலை: பல வாரங்கள் நீடிக்கும் லேசான வீக்கம், அடிக்கடி மீண்டும் மீண்டும் தோன்றுதல், நகம் வடிவம் மாறுதல் அல்லது மெலிதாகுதல், சீழ் குறைவாக இருந்தாலும் முழுமையாக ஆறாத நிலை.

இந்தக் கட்டத்தில் வாதம் -கபம் சேர்ந்து செயல்படும் போது, பகுதி உலர்ச்சி, கருமை அல்லது தோல் உரிதல் போன்ற மாற்றங்கள் காணப்படும்.

சிலருக்கு நீரிழிவு நோயாளிகளில், சிறிய வீக்கமே வேகமாகத் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.

நகச் சுற்று தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையில் முதன்மையான காரணிகளைத் தவிர்த்து, உடலின் வாத -பித்த சமநிலையை ஏற்படுத்துவதே நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. வீக்கம் குறைத்தல், வலி தணித்தல், கிருமி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல் மற்றும் காயம் விரைவில் ஆறச் செய்தல் ஆகியவை சிகிச்சையின் அடிப்படை அம்சங்களாகும். சாஸ்திரங்களில் கூறப்படும் 'துஷ்ட வ்ரண தனம், úஸாதனம், ரோபணம் ச' என்ற தத்துவத்தின்படி முதலில் பாதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தப்படுத்தி, பின்னர் புதிய திசு உருவாக்கத்தை ஊக்குவிப்பதே முக்கிய நடைமுறையாகும்.

நோயின் நிலையைப் பொருத்து வைத்தியர் ஆலோசனையில் ரஸ்நாஸப்தகம் கஷாயம், மஹா யோகராஜ குகுலு, மஞ்சிஷ்டாதி, பஞ்சதிக்த கஷாய, கதிராரிஷ்டம் போன்ற உள்ளக மருந்துகள் வழங்கப்படலாம். இம்மருந்துகள் உடலினுள் ஏற்பட்டுள்ள வாத -பித்த அதிதோஷத்தைச் சமப்படுத்தி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, அழற்சி மற்றும் சீழ் உருவாக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

வெளிப்புறச் சிகிச்சைக்கு முன் காயத்தைச் சுத்தப்படுத்துதல் மிக முக்கியம். கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட மூலிகைகள் காயத்தைச் சுத்தப்படுத்தவும், அழற்சியைத் தணிக்கவும், புதிய திசு வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும். மஞ்சள், கதிரம், அசன, திரிபலா, மஞ்சிஷ்டா, சரக்கொன்னை, பஞ்சவல்கலம் (ஆலமரம், அரசுமரம், அத்திமரம், இத்திமரம், பரிஷமரம்) ஆகியவற்றின் பட்டைகள்) போன்ற மூலிகைகள் சேர்த்து கஷாயம் தயாரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தினசரி கழுவுதல் பரிந்துரைக்கப்படுகிறது.

இது சீழைக் கட்டுப்படுத்தி, ஈரப்பதத்தைக் குறைத்து, கிருமி வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. அதனை தொடர்ந்து ஜாதிப்பூ, வேப்பம் பட்டை, படோல இலை, புங்கம் பட்டை, துத்தி, மஞ்சள், மரமஞ்சள், லோத்ரா பட்டை, அதிமதுரம், கோமூத்திரம் ஆகிய மூலிகைகள் சேர்த்துத் தயாரிக்கப்படும் தைலம் வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படுகிறது. இது, புண் விரைவில் ஆறச் செய்கிறது.

சிகிச்சையுடன் உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் கவனம் அவசியம். அதிக காரம், புளிப்பு, எண்ணெய் வறுவல், ஊறுகாய், பதப்படுத்திய உணவு போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். கசப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட கீரைகள், பாகற்காய், முருங்கைக்கீரை, வெந்நீர் குடித்தல் போன்றவை உடல் சமநிலையைப் பேண உதவும். உள் சமநிலையும் வெளிப்புறச் சுத்தமும் பாதுகாக்கப்படும்போது நகச் சுற்று தொற்று எளிதில் கட்டுப்படுத்தப்படுவதுடன், மீண்டும் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.