கோலிவுட் ஸ்டூடியோ!
வீடு என்பது ஒவ்வொருக்குமான உரிமை - பிரஷாந்த்!
வீடு என்பது ஒவ்வொருக்குமான உரிமை - பிரஷாந்த்!
ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளையானது தனது நிறுவனச் சமூகப் பொறுப்புணர்வு சார்ந்த முன்னெடுப்புகளை சுகாதாரம், கல்வி, முதியோர் பராமரிப்பு மற்றும் பெண்கள் மேம்பாடு ஆகிய துறைகளில் மையப்படுத்தியுள்ளது.
கேரளத்தில் மாதாந்திர டயாலிசிஸ் கருவிகளை விநியோகித்தல், டயாலிசிஸ் இயந்திரங்களை நன்கொடையாக வழங்குதல், மருத்துவமனை வார்டுகளைப் புதுப்பித்தல் மற்றும் நோய்த்தடுப்பு சிகிச்சை மற்றும் ரத்த தான இயக்கங்களுக்கு ஆதரவு அளித்தல் ஆகியவை இதன் சுகாதார முயற்சிகளில் அடங்கும். தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 'ஜோய் இல்லங்களை' இந்த அறக்கட்டளை வழங்கியுள்ளது.
இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குநர் சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
'வீடில்லாத, நிலமில்லாத ஐம்பது குடும்பத்தினரை தேர்வு செய்து ஒரு தரமான, அருமையான வீட்டை அவர்களுக்கு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றாலும், அவர்களைத் தேடிச்சென்று மருத்துவ உதவி செய்கிறார்கள். ' என்றார் பிரஷாந்த்.
சிறிய முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் அங்கீகாரம் - வெற்றிமாறன்!
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகியிருந்த படம் 'சிறை'. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருந்தார். இந்நிலையில் 'சிறை' படத்தின் 75-ஆவது நாள் வெற்றிவிழா கொண்டாட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், 'இந்தப் படத்திலிருக்கும் உண்மை, அது கடத்த நினைக்கும் உணர்வு எல்லோருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். இது தமிழின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். அதை சுரேஷ் ஒரு திரைக்கதையாக மாற்றி, படத்தை வெற்றியாகக் கொடுத்திருக்கிறார். இதில் தமிழ் எந்த இடத்திலும் தனக்கான அங்கீகாரத்தைக் கேட்காதது ஆச்சரியத்துக்குரியது.
ஒன்று வெற்றி அடைந்தால், இது என்னுடையது எனக் குறிப்பிடும் வழக்கம் இருக்கும். அதை எங்குமே தமிழ் கோரவில்லை. அதே சமயம் சுரேஷ் எந்த இடத்திலும் தமிழை விட்டுக் கொடுக்கவில்லை. அது அவர்களிடம் உள்ள சிறப்பு.
'சிறை' படத்தை தமிழ் மக்கள் பார்த்தவிதம் மிகவும் சிறப்பானது. மற்ற மொழிகளில் 'சிறை' படம் வெளியாகி இருந்தால் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்குமா எனத் தெரியவில்லை. தமிழில் மட்டும்தான் இதுபோன்ற முயற்சிகளைத் தொடர்ந்து செய்கிறார்கள். நல்ல படங்களுக்கான சிறிய முயற்சிகளை மக்கள் அங்கீகரிக்கிறார்கள்' என்று பேசியிருக்கிறார்.
விஜய், அஜித் குறித்து தமன்னா!
தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் குறித்து தமன்னா பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.
மேடையில் பேசிய தமன்னா, 'தற்போது 'புருஷன்' என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதைப் பாதியிலேயே விட்டு விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். நான் முதன் முதலில் நடித்த 'கல்லூரி' திரைப்படம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அந்தக் கதை கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தது.
கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு தருணங்களையும் நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும். இந்தக் காலம் உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. 21 வருடம் நான் சினிமாவில் இருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி!' என்றிருக்கிறார்.
தொடர்ந்து விஜய் பற்றிப் பேசிய தமன்னா, 'மிகவும் எளிமையான, மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவரும், ஜூனியர் என்.டி.ஆரும்தான் சிறந்தவர்கள்' என்று கூறியிருக்கிறார்.
அஜித் பற்றிச் சொல்லும்போது, ' 'வீரம்' படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து எனக்கு இட்லி செய்து கொடுத்தார். அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர், மென்மையானவர், நல்ல குடும்பஸ்தன்' எனப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.