முகப்பு
தினமணி கதிர்

பாலிவுட ஸ்டூடியோ!

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், 'வாரணாசி' படத்தில் நடித்து வருகிறார்.

Updated On : 28 மார்ச், 2026 at 10:34 PM
பிரியங்கா சோப்ரா
பகிர்:

பாலிவுட்டில் ஏன் இல்லை பிரியங்கா சோப்ரா!

ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில், 'வாரணாசி' படத்தில் நடித்து வருகிறார். எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் ஹாலிவுட்டுக்குச் சென்றது ஏன் என்பது பற்றி பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

'பாலிவுட்டை விட்டு வெளியேற நான் நினைத்ததில்லை. அங்கு பணிபுரிந்தபோது பல காரணங்களுக்காக நான் ஒதுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன். அதனால் என் எல்லையை விரிவுபடுத்த நினைத்தேன்.

ஒரு நடிகையாக எனக்கு உற்சாகமாக இருக்கும் வாய்ப்புகளைத் தேடும் ஆசை எனக்கு வந்தது. அமெரிக்காவுக்குச் சென்று நடிக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அற்புதமான படைப்புகளைத் தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலைக் காண்கிறேன்.

எனக்கு இந்தியப் படங்கள் மிகவும் பிடிக்கும். 'வாரணாசி' மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்கிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. நான் இரண்டு உலகங்களைக் கடந்து செல்வதுபோல் உணர்கிறேன்.

இரண்டு துறைகளிலும் பணியாற்றுவதை ரசிக்கிறேன். கலாசாரங்களைப் போலவே, இரண்டும் வெவ்வேறு வழிகளில் வேறுபட்டவைதான். ஆனால், இப்போது என்னால் அங்கும் இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, அற்புதமான விஷயம்' என்று பிரியங்கா சோப்ரா பேசியிருக்கிறார்.

ராம்கோபால் வர்மா

ஆக்ஷன் படங்கள் பழைய பாணியில் ராம்கோபால் வர்மா!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து, தென்னிந்தியத் திரைப்படங்களின் ஆதிக்கத்தை மாற்றியமைக்கும் என பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படம் பற்றி அவர், 'சென்ற ஆண்டு டிசம்பரில் வெளியான 'துரந்தர்' முதல் பாகம் உலகளவில் சுமார் 1,300 கோடி ரூபாய் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகவுள்ள இரண்டாம் பாகம் 1,500 கோடி முதல் 2,000 கோடி ரூபாய் வரை வசூல் செய்தால், அது தென்னிந்திய ஆக்ஷன் படங்களின் தற்போதைய நிலையைத் தலைகீழாக மாற்றும்.

தென்னிந்திய ஆக்ஷன் திரைப்படங்கள் இன்னும் பழைய பாணியிலான மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளையே நம்பியுள்ள நிலையில், 'துரந்தர்' திரைப்படம் யதார்த்தமான, உக்கிரமான ஆக்ஷன் காட்சிகளை முன்னிறுத்துகிறது.

இப்படத்தின் இரண்டு பாகங்களும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டதால், கதை 'பாகுபலி' படத்தைப் போல ஒரு தொடர்ச்சியான ஓட்டத்தைக் கொண்டிருக்கும்' எனக் கூறியிருக்கிறார்.

ஆதித்யா தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தில், ரன்வீர் சிங் பாகிஸ்தானில் இருக்கும் இந்திய உளவாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் மாதவன், அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், ராகேஷ் பேடி மற்றும் சாரா அர்ஜுன் எனப் பலரும் நடித்துள்ளனர். மார்ச் 19 அன்று இதனுடன் வெளிவரவிருந்த 'டாக்ஸிக்' படமும் தள்ளிப்போயிருப்பதால் 'துரந்தர்' இரண்டாம் பாகம் வசூலில் சாதனை படைக்க அதிக வாய்ப்பிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் கணிக்கின்றன.

மிருணால் தாக்குர்

என்னை ஏற்றுக்கொண்ட விதம் மிருணால் தாக்குர் !

மிருணால் தாக்குர் நடித்திருக்கும் 'டகாய்ட்' திரைப்படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அவரை ஏற்றுக்கொண்ட விதம் பற்றி இப்படத்துக்கான புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மிருணால் தாக்குர், 2018-இல் 'லவ் சோனியா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு மூன்று தெலுங்குப் படங்களில் நடித்தார். இப்படங்களின் மூலம் பாலிவுட்டைத் தாண்டி மற்ற மொழி சினிமாக்களில் இவர் பெரியளவில் பரிச்சயமானார்.

மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பாலிவுட் இயக்குநர்கள் அவரைப் பல வகையான ரோல்களில் ஏன் காஸ்ட் செய்யவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த மிருணால், 'நான் படிப்படியாக ஏணியில் ஏறிக்கொண்டிருக்கிறேன். முன்பு நான் தயாராக இல்லை. இப்போது முற்றிலும் தயாராக இருக்கிறேன். எனக்காகவே எழுதப்பட்ட ரோல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.

இயக்குநர்களும் இந்த ஸ்கிரிப்ட்டை உங்களை மனதில் வைத்து எழுதியிருக்கிறேன் எனச் சொல்கிறார்கள். இப்படிச் சொல்வதெல்லாம் எனக்கு மிகப்பெரிய விருது. முதல் தெலுங்குப் படமான 'சீதா ராமம்' பிளாக்பஸ்டரானதால், தென்னிந்திய சினிமாவில் எனக்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதன் பிறகுதான் அனைவரும் என்னை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வளர்ந்தேன்' எனக் கூறியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.