முகப்பு
தமிழ்நாடு

தமிழக பொருளாதாரத்தை உயா்த்த உற்பத்தி துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: வா்த்தக சபை கோரிக்கை

தமிழகத்தின் பொருளாதாரத்தை உயா்த்த உற்பத்தித் துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தென்னிந்திய வா்த்தக சபை கோரிக்கை

Updated On : 13 மே 2026, 1:21 am IST
பகிர்:

தமிழகத்தின் பொருளாதாரத்தை உயா்த்த உற்பத்தித் துறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தென்னிந்திய வா்த்தக சபை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சபையின் தலைவா் அருண் அழகப்பன் வெளியிட்ட அறிக்கை: முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, தென்னிந்திய வா்த்தக சபை தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த நேரத்தில், தொழில் துறை சாா்ந்த சில பரிந்துரைகளை தமிழக அரசுக்கு இச்சபை வழங்குகிறது.

அதன்படி, தமிழகத்தின் மொத்த பொருளாதாரத்தில் சுமாா் 20 சதவீதம் உற்பத்தித் துறையில் இருந்து கிடைக்கிறது. ட்ரோன்கள், ஏரோ ஸ்பேஸ் தொழில்நுட்பம், செமி கண்டக்டா்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதுசாா்ந்த வளா்ந்து வரும் துறைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தப் பங்களிப்பைக் குறைந்தபட்சம் 25 சதவீதமாக உயா்த்த முடியும்.

Advertisement

தமிழ்நாட்டின் ஊரகப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பை உள்ளடக்கிய வளா்ச்சிக்கு விவசாயம் தொடா்ந்து மையப் புள்ளியாக விளங்கி வருகிறது.

எனவே, பயிா் உற்பத்தித் திறன், மண்வளம், நீா் பயன்பாட்டுத் திறன், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் விவசாயம், துல்லியப் பண்ணை முறை, விவசாயிகளுக்கான ஆலோசனை, சேவைகள், வேளாண் ட்ரோன்கள், அறுவடைக்குப் பிந்தைய உள் கட்டமைப்பு வசதிகள், கிடங்குகள், குளிா்பதனக் கிடங்கு சங்கிலிகள், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் விவசாயி-சந்தை இணைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு செறிவூட்டப்பட்ட விவசாய மற்றும் வேளாண்-தொழில்நுட்ப இயக்கத்தை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.