மே 4-க்குப் பிறகு பாஜக பதவியேற்பு விழாவுக்கு வருவேன்! மேற்குவங்கத்தில் மோடி பேச்சு
மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி இறுதிக்கட்ட பிரசாரம்...
மே 4-க்குப் பிறகு பாஜக பதவியேற்பு விழாவுக்கு வருவேன் என மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மேற்குவங்கத்தில் முதல்கட்டத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப். 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
அதன்படி மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரசாரத்திற்கு இன்று கடைசி நாள் என்பதால் அங்கு இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
Advertisement
பிரதமர் மோடி நேற்று காலை மேற்குவங்கம் வந்த நிலையில் காளி கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தைத் தொடங்கினார். வடக்கு கொல்கத்தாவில் சாலைவலம் மேற்கொண்டார்.
தொடர்ந்து இன்று அவர் பராக்பூரில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி வருகிறார். பிரதமர் மோடியின் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
கூட்டத்தில் பேசிய அவர்,
"இந்தத் தேர்தலுக்கான எனது கடைசிப் பொதுக்கூட்டம் இதுவாகும். மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, பாஜகவின் பதவியேற்பு விழாவில் நான் நிச்சயமாகக் கலந்துகொள்வேன் என்ற நம்பிக்கையுடன் நான் இங்கிருந்து திரும்புகிறேன். அந்த நம்பிக்கை எனது உற்சாகத்தை மேலும் அதிகரிக்கிறது.
நான் ஹெலிபேடிலிருந்து இங்கு வந்துகொண்டிருந்தேன். அது சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் கொண்ட பாதையாகும். அந்தப் பாதையின் இருபுறமும் திரளான மக்கள் கூட்டம் கூடியிருந்தது. அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் என்னை வாழ்த்துவதற்காகத் திரண்டு வந்திருப்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
நான் வீட்டை விட்டு வெளியேறிய நாள் முதல், உங்கள் அனைவருடனும் இருப்பதில் மகிழ்ச்சியையும் அமைதியையும் காண்கிறேன், நீங்கள்தான் என் குடும்பம்.
கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக நான் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பயணம் செய்து வருகிறேன். அரசியலில் நுழைந்த பிறகு, பாஜகவில் சேர்ந்த பிறகு, ஒரு பாஜக தொண்டராக, கட்சி என்னிடம் கேட்பதை எல்லாம் நான் செய்து வருகிறேன். தேர்தல் பொறுப்புகளையும் திறம்பட செய்து வருகிறேன்" என்றார்.