இசை கேட்டால் புவி அசைந்தாடும்!
'முந்தைய சந்நிதானங்கள் காலத்தில் திருவையாற்றுப் பதிகத்தை மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் இசைத்து மழையை வரவழைத்து வறட்சியைப் போக்கிய வரலாற்று நிகழ்வுகள் உண்டு.
'முந்தைய சந்நிதானங்கள் காலத்தில் திருவையாற்றுப் பதிகத்தை மேகராகக் குறிஞ்சிப் பண்ணில் இசைத்து மழையை வரவழைத்து வறட்சியைப் போக்கிய வரலாற்று நிகழ்வுகள் உண்டு. அரிய இசைக் கருவிகளை கண்காட்சிப்படுத்தி, விழாக்காலங்களில் இசைக்
கிறோம். முற்காலத்தில் பயன்பாட்டில் இருந்த பழங்காலக் கருவிகள் முதல் இக்காலத்துக் கருவிகள் வரை சேகரித்துப் பாதுகாக்கிறோம். இசைக்கலைஞர்களையும் பாராட்டி கெளரவிப்பதிலும் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி' என்கிறார் தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள்.
திருமடங்கள் என்றாலே ஆன்மிக வழிபாடுகள் மட்டுமல்ல; இலக்கியம், திருமறை, திருமுறை சுவடிகள், அச்சுப் பணி, பாரம்பரிய சங்கீதம், பரதம் உள்ளிட்ட மொழி, கலாசாரம் சார்ந்த விஷயங்களுக்கான களங்களாகவும் விளங்கிவருகின்றன. பெரும்பாலானோர் அறிந்திராத கலைப் பொக்கிஷங்களைக் கண்காட்சிப்படுத்தியும், பாதுகாத்தும் வரும் திருமடங்களின் பணி மகத்தானது. அந்த வகையில் மடத்துக்கும் பண்டைய இசைக்கருவிகளுக்கும் உள்ள பாரம்பரியமான தொடர்புகள் குறித்து தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள் கூறியது:
'தருமை மடத்துக்கும், இசைக்கும் உள்ள தொடர்பு நெடிய பாரம்பரிய வரலாறு உடையதாகும். மூவர் முதலிகளில் முதல்வரான திருஞானசம்பந்த அவதாரத்தலமான சீர்காழியும், முக்தித் தலமான ஆச்சாள்புரமும் தருமையாதீனத்தின் உரிமை பெற்றவை.
வாயால் பாடப்படும் பண்கள்/பதிகங்கள் ஆகாயத் தொடர்புடையவை. சேகண்டி, திருச்சின்னம் போன்ற உருக்கி வார்க்கப்பட்ட உலோகக் கருவிகளால் இசை எழுப்புதலானது நெருப்பு தொடர்புடையவை. புல்லாங்குழல், நாகசுரம் போன்ற காற்றுக் கருவிகள் வாயுவின் தொடர்புடையவை. நீரில் கிடைக்கும் பொருள்களான சங்கு போன்றவை நீர் தொடர்புடையவை. மரத்தினால் செய்யப்பட்டு தோலால் மூடப்பட்ட மத்தளம், முழவு போன்றவை பூமி தொடர்புடையவை. பஞ்சபூதங்களில் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்துள்ள இத்தகைய அரிய வகைக் கருவிகளை இங்கு பிரத்யேகமாகப் பயன்படுத்துவதை வழக்கமாக்கி இருக்கிறோம். அரிய வகைக் கருவிகளை அனைவரும் அறிய வேண்டிய ஆவலின் காரணமாக கண்காட்சிப்படுத்தியுள்ளோம்.
கல் நாகசுரம்
கும்பகோணம் குடமுழுக்கு விழாவில் கல் நாகசுரம் சிறப்பாகப் பேசப்பட்டது. அந்தக் கருவி நம் மடத்திலும் தொன்று தொட்டுப் பயன்பாட்டில் உள்ளது. ஆச்சாள் மரத்தில் செய்யப்படும் வழக்கமான நாகசுரத்தைப் போலவே இதிலும் துளைகள் உண்டு. அதிகமான கனம் உடையது. இதனை இசைப்பதற்கு அதிக மூச்சுத் திறனும் பயிற்சியும் தேவை. மிகவும் கம்பீரமான இசையைத் தருவது இது.
குடமுழா: அடுத்து குடமுழா. திருவாரூர் கோயிலில் இதனைக் காணலாம். அபூர்வமான தோற்கருவி. பெரிய உலோகக் குடத்தின் ஐந்து தனித்தனி முகங்கள் தோலால் மூடப்பட்டிருக்கும். இரு கைகளாலும் மாறி மாறித் தட்டும்போது இந்த ஐந்திலுமே வெவ்வேறு நாதங்கள் பிறக்கும். இந்தக் கருவியை காலை பூஜை நேரத்தில் தினமும் வாசிக்கிறோம்.
தில்தில்: மென்மையான இனிமையான ஒலியைத் தரக்கூடிய துணைக் கருவியான தில்தில், சிறிய வகை நரம்புக்கருவியாகும். பழங்காலக்கூத்துகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்
சங்க இலக்கியங்களில் பேசப்படுகிற பெரிய அளவுடைய இசைக்கருவியே யாழ். இதில் வில் போன்ற அமைப்புடைய 'பேரி யாழ்' குறிப்பிடத்தக்கது. இரண்டு கைகளாலும் இதன் நரம்புகளை மீட்ட வேண்டும்.
21 நரம்புகள் இருப்பதால் நுண்மையான பண்களைக்கூட இசைக்க முடியும். இதனை இசைப்பவர்களை 'பாணர்கள்' என்று குறிப்பிடுவர். மகர யாழ், சகோடயாழ் உள்ளிட்ட வகைகளும் உண்டு.
சாரங்கி: வில் கொண்டு வாசிக்கப்படும் கருவியான சாரங்கி, விரலுக்குப் பதிலாக நகங்களைக் கொண்டு மீட்டப்படும் கருவியாகும். இதனை மீட்டுவதற்குக் கடினமான பயிற்சி தேவை. திருமடத்துத் தம்பிரானான விருத்தாச்சல தம்பிரான் இக்கருவியை இசைப்பதில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார். இவர் 14-ஆவது குருமகா சந்நிதானம் கந்தப்பதேசிக சுவாமிகளது காலத்தில் வாழ்ந்த இவர், இதன் மூலம் அம்பிகை பாடல்களைப் பாடுவார். இதனைக் கேட்டு மனமகிழ்ந்த அன்னை சுவாமிகளது தோளில் நிருத்தம் செய்திருக்கிறாள். இதனைக் கண்ட திருவிதாங்கூர் மன்னர் அத்தம்பிரானை வணங்கி, நிறைய முற்றூட்டுகள் அளித்து கெளரவித்துள்ளார். நவராத்திரி, சரஸ்வதி பூஜைகளின்போது, சாரங்கியை தேவியின் கரங்களில் இருத்தி இரண்டு நாள்கள் பூஜை செய்வது மரபாகும்.
துண்டினா
அண்மையில் மிகவும் தொன்மையான 'துண்டினா' எனப்படும் துந்தனா கருவி மடத்துக்கு வந்தது. ஒற்றை நரம்பினை உடைய ஏக்தாரா வகையைச் சேர்ந்த கருவியாகும்' என்கிறார் மயிலாடுதுறை தருமை ஆதீனகர்த்தர்.