மைசூரு செயின்ட் ஜோசப் சென்ட்ரல் பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவி குஷி, அண்மையில் சிங்கப்பூரில் நடந்த ஆசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் 4 தங்க பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர், இந்தியா ஆகிய ஆசிய நாடுகளில் யோகாவில் திறமையாக பயிற்சி பெற்றவர்களுக்காக சிங்கப்பூரில் நடந்த ஆசிய யோகா போட்டியில் பங்கேற்ற குஷி, அத்லெடிக் யோகாசனா, ஆர்டிஸ்டிக் யோகா ஜோடி, ரித்மிக் யோகா ஜோடி, ஃப்ரீ ஃப்ளோ யோகா ஆகிய நான்கு பிரிவுகளில் தங்க பதக்கம் பெற்றதோடு, ஆர்டிஸ்டிக் யோகாவில் தனிநபராக வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார். மேலும் உடலை பின்புறமாக வளைத்து முன்புறமாகக் கொண்டுவரும் கடினமான யோகாவை ஒரு நிமிடத்தில் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து குஷி கூறியது, "அடுத்து இந்தியாவில் நடைபெறவுள்ள "சர்வதேச யோகா சாம்பியன்ஷிப், "தேசிய யோகா சாம்பியன்ஷிப்' போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் பெறுவதுதான் என்னுடைய குறிக்கோள்.
உத்தரபிரதேசத்தில் நடைபெறவுள்ள தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதன்மூலம், கோவாவில் நடைபெறும் "உலக யோகா சாம்பியன்ஷிப்' போட்டியில் நேரடியாக பங்குபெறும் வாய்ப்புள்ளது என்பதால் தினமும் யோகா பயிற்சிக்காக மூன்று மணி நேரம் செலவழிக்கிறேன்.
யோகாவில் ஆர்வம் காட்டுவதற்குமுன் பொழுதுபோக்குக்காக ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வந்தேன். அப்போது மூச்சு திணறல் பிரச்னை ஏற்பட்டதால் யோகா பயிற்சி பெறும்படி அறிவுறுத்தினார்கள்.
யோகா குரு கீதா, என்னுடைய திறமையைப் பார்த்து பயிற்சியின் போது அதிக ஊக்கமளித்தார். தற்போது கணேஷ்குமார் மேற்பார்வையில் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் வல்லமை பெற்றுள்ளேன். எனக்கு கிடைத்த விருதுகள்ஆர்வத்தையும் ஊக்கத்தையும் அளிக்க உதவியது'' என்றார் குஷி.
- பூர்ணிமா