காந்தியடிகள் ஒருசமயம் வெளிநாட்டுப் பத்திரிகையாளருக்குப் பேட்டி தந்தபோது, எல்லோருக்குமே சந்தேகமாய் இருந்த ஒரு விஷயத்தை காந்தியடிகளிடம் அவர் கேள்வியாய் கேட்டார்.
"தாங்கள் எப்போதும் இளம் பெண்கள் தோளில் கைபோட்டபடி நடக்கிறீர்களே, அது ஏன்?'' - அதுவே அவர் கேள்வி.
அதற்கு காந்தியடிகள் தந்த பதில் -
"நான் எனக்கு ஆதரவாக இரு இளம் பெண்கள் தோளில் கை போட்டு நடப்பது உண்மையே. அவர்கள் என் பேத்திகள்தான். இருந்தாலும் அவர்கள் பெண்கள் அல்லவா என்று நீங்கள் கேட்கக்கூடும்.
இப்படி இளம் பெண்களான என் பேத்திகள் மீது ஆதரவாக நான் கைகளைப் போட்டு நடக்கும்போது, மக்கள் மத்தியில் எந்தத் தொல்லையும் இல்லாமல் நான் நடக்க முடிகிறது. என்னை அருகிலே வந்து தொட்டுப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கிற மக்கள் என் இருபுறமும் இரண்டு இளம்பெண்கள் வருவதைக் கண்டு தாமாகவே சற்று தள்ளி நிற்கிறார்கள். அந்தப் பெண்ணின் மீது தாங்கள் மோதிவிடக் கூடாது என்பதில் மக்கள் எச்சரிக்கையாய் இருக்கிறார்கள். இதனால் நான் எவ்வளவு கூட்டத்திலும் மக்கள் மத்தியில் எந்தத் தொந்தரவுக்கும் ஆளாகாமல் நடந்து வர முடிகிறது'' என்றார் காந்தியடிகள்.
("பண்பாட்டை வளர்க்கும் அறிஞர்களின் வாழ்க்கை' என்னும் நூலிலிருந்து)
முக்கிமலை நஞ்சன்