சினிமாவில் பிரபலம் ஆன நட்சத்திரங்களில் சிலர், அரசியலில் குதிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி தென்னிந்திய சினிமாவில் இருந்து பாராளுமன்றத்துக்கு சென்றவர்கள் நெப்போலியன், ஜெயப்பிரதா. தற்போது இருவரும் அரசியலில் இருந்து விலகி சினிமாவுக்கு திரும்பியுள்ளனர். இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் "யாகம்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகங்கள் ஆகாஷ்குமார், மிஸ்தி இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷங்கர் உதவியாளர் நரசிம்மா இயக்குகிறார். இதன் ஆடியோ விழாவில் ஜெயப்பிரதா பேசும்போது, "அரசியலுக்கு சென்றுவிட்டு மீண்டும் சினிமாவுக்கு திரும்பி இருக்கும் நானும், நெப்போலியனும் இதில் ஜோடியாக நடிக்கிறோம். மீண்டும் நடிக்க முடிவு செய்தபோது தான் இக்கதையை என்னிடம் இயக்குநர் கூறினார். ஒரு தாய்க்கும், மகனுக்கும் இடையேயான அன்பை சொல்லும் படம். கெட்ட சக்திகளிடமிருந்து மகனை காக்கும் காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன்' என்றார்.நெப்போலியன் பேசும் போது, "அமெரிக்காவில் நான் வசித்து வந்தாலும் தமிழை மறக்க மாட்டேன். இடையில் சில காலம் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். தற்போது தொடர்ச்சியாக நடிக்கிறேன். இதில் வித்தியாசமான தோற்றத்தில் என்னை காணலாம்' என்றார்.