சர்வதேச வெளிச்சம் கிடைத்திருந்தாலும், தரமான கதைகளுக்கு இசையமைக்க சம்மதிக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். உலக அளவில் மேடை இசை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன், படத் தயாரிப்பு, இயக்கம் என்று கவனம் செலுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டின் இறுதியில் சென்னையில் மாபெரும் இசை திருவிழா ஒன்றை நடத்த இருக்கிறார். அதில் ரஹ்மான் பங்கேற்பதுடன் ஹாலிவுட் நடிகர் வில்ஸ் ஸ்மித் பங்கேற்கவும் ஏற்பாடுகள் நடக்கிறது. இதுதொடர்பாக சமீபத்தில் அவரை ஏ.ஆர்.ரஹ்மான் நேரில் சந்தித்தார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளது... ""வில்ஸ் ஸ்மித்துடன் நடந்த சந்திப்பு மிகவும் அற்புதமானதாக அமைந்தது. முன்பே இருவருக்கும் சிறந்த நட்பு என்ற போதிலும், இப்போதுதான் நீண்ட நேரம் சந்தித்து பேசியிருக்கிறோம். மிகச் சிறந்த நடிகரான வில்ஸ் ஸ்மித் இப்போது என் மனதுக்கு நெருக்கமாகிவிட்டார்'' என குறிப்பிட்டிருக்கிறார்.
ரஹ்மானின் இந்த அழைப்பை வில்ஸ் ஸ்மித்துடன் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.