முன்னொரு காலத்தில் தகுவா என்னும் மீசைக்காரன் இருந்தான். அவன் அழகாகவும் வாட்ட சாட்டமாகவும் இருந்தான். அவன் மீசை மிகக் கருப்பாகவும், நீளமாகவும் இருந்தது. இதனால் அவர்கள் குடும்பத்திற்கே மீசைக்கார குடும்பம் என்று பெயர். எனவே அவன் தனது மீசையைப் பொன் போல் போற்றி வந்தான்.
தகுவா தினமும் படுக்கச் செல்லும் முன்பு, தனது மீசையைச் சுத்தமாகச் சீவுவான். அதற்கு எண்ணெய்யும் தடவுவான். அதற்காக விஷேச எண்ணெய்யை நகரத்திலிருந்து வாங்கி வைத்திருந்தான். பிறகு வெள்ளை ரிப்பன் போட்டு மீசையை நன்கு கட்டிவிடுவான்.
தூங்கும்போது மீசையில் முடிச்சு விழக்கூடாது என்பதற்காக அவன் இவ்வாறு செய்து வந்தான்.
காலையில் எழுந்ததும் ரிப்பனை அவிழ்ப்பான் மீசை மிக ஒழுங்காகவும் மிருதுவாகவும் இருக்கும்.
ஒருநாள் தகுவாவின் மனைவி விடியற்காலையிலேயே எழுந்து விட்டாள். எழுந்ததும் முற்றம் காலியாக இருப்பதைக் கவனித்தாள். முற்றத்தில் நிற்கும் குதிரையைக் காணோம். அவள் சத்தம் போட்டு அழத் தொடங்கிவிட்டாள். அவளது கூச்சலைக் கேட்டு ஊர்க்காரர்கள் கூடி விட்டனர்.
""என்ன நடந்தது?'' என்று எல்லாரும் கேட்டனர்.
""அழுது கொண்டே எங்கள் குதிரை களவு போய்விட்டது'' என்றாள் அவள்.
அப்பொழுது பாதித் தூக்கத்திலிருந்த தகுவா அங்கு வந்தான். அவனது மீசையில் கட்டப்பட்ட ரிப்பன் அப்படியே இருந்தது. அக்கம் பக்கத்தார் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.
""நேற்று உன் குதிரை எங்கிருந்தது?''
""முற்றத்தில் ; அதற்கென்ன?''
""அது நொண்டிக் குதிரையா?''
"" இல்லை. ஏன்? எதற்காகக் கேட்கிறீர்கள்?''
""கம்பத்தில் கட்டியிருந்தீர்களா?''
""கட்ட மறந்துவிட்டேன். என்ன நடந்தது?''
""அப்படியானால், எங்கள் வாழ்த்துகள்!'' என்றார் அடுத்த வீட்டுக்காரர்.
""நீங்கள் மீசையை மட்டும் ஒழுங்காகக் கட்டி இருக்கிறீர்கள். ஆனால் குதிரையைக் கட்ட மறந்து விட்டீர்கள்.
நீங்கள் இப்போதே தூங்கப் போகலாம். நீங்கள் தூங்கி விழிக்கும் வரை உங்கள் மீசையாவது அப்படியே களவு போகாமல் இருக்கும்'' என்றார் மற்றொருவர்.