முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு ரசிகர்கள் பாகிஸ்தானிலும் உண்டு. வெளியூர்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களிலும் தோனியின் ரசிகர்கள் அதிகம். அந்த ரசிகர்களில் ஒருவர்தான் முகம்மது பஷீர். அமெரிக்காவில் சிகாகோவில் உணவகம் ஒன்றை நடத்தி வருபவர்.
பஷீருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். அதிலும் தோனி ஆடுகிறார் என்றால் சிகாகோவிலிருந்து பறந்து வந்து ஆட்டத்தைப் பார்த்துச் செல்வார். பஷீர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றாலும், அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்து முடிந்த இந்திய - பாகிஸ்தான் போட்டியின் போது தோனி, பஷீருக்கு வழக்கம் போல டிக்கெட் அனுப்பி வைக்க, பஷீர் சிகாகோவிலிருந்து மான்செஸ்டருக்குப் பறந்து வந்தார்.
டிக்கெட் வாங்க கூட்டமோ கூட்டம். "தோனியின் அன்பளிப்பினால் கியூவில் நிற்காமல் கட்டணம் செலுத்தாமல் அலுங்காமல் குலுங்காமல் சிரமம் ஏதும் இல்லாமல் என்னால் மைதானத்திற்குச் சென்று கிரிக்கெட் ஆட்டம் காண முடிந்தது..' என்று சொல்லும் பஷீருக்கு 63 வயதாகிறது.
"தோனி ரொம்பவும் பிசியாக இருப்பவர். அதனால் அவரை அடிக்கடி அலைபேசியில் தொடர்பு கொள்வதில்லை. குறுஞ்செய்திகளை அவ்வப்போது அனுப்புவேன். அவைகளுக்கு தோனி மறக்காமல் பதில் அனுப்புவார். வேறு யாருக்கும் கிடைக்காத நட்பு எனக்கு கிடைத்திருக்கிறது..' என்று பெருமைப்படுகிறார் பஷீர்.