தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் அத்தனையிலும் கவனம் ஈர்க்கிறார் நடிகர் வெற்றி. தற்போது அடுத்தடுத்து 5 படங்களில் நடித்து வருகிறார்.
இது குறித்து அவர் பேசும் போது:- "கேர் ஆஃப் காதல்', இப்படம் "கேர் ஆப் கச்சிராப்பலம்' என்ற தெலுங்குப் படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. "இறுதிச்சுற்று' படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் "தாடி'. பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
இதன் பின் "வனம்' படம் வெளியாகும். "தடம்' படத்தின் நாயகியாக நடித்த ஸ்ம்ருதி இந்த படத்திலும் நாயகியாக நடிக்கிறார். கலைக்கல்லூரியில் சிற்பக்கலை பயிலும் மாணவனாக நடிக்கிறேன். பூர்வ ஜென்மத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
மூணாறு அருகே உள்ள காட்டில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படத்தின் இறுதிக் காட்சிக்காக வித்தியாசமான முறையில் சண்டைக் காட்சியை அமைத்திருக்கிறோம். அக்காட்சி அனைவராலும் பேசப்படும்.குரு ராமானுஜம் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
அப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. கதை தேர்வில் சிறிது குழப்பமாக இருந்தால் எனது சகோதரர் மற்றும் அப்பாவுடன் கதை கேட்டு முடிவு செய்வேன். பல கதைகள் கேட்டு அவற்றில் 5 கதைகளைத் தேர்வு செய்திருக்கிறேன். இதன் பிறகு சொந்த தயாரிப்பில் ஈடுபடுவேன். இயக்கத்தில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இல்லை'' என்றார்.