"பாகுபலி' திரைப்படங்கள் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இப்படத்தைத் தொடர்ந்து "சாஹோ'வில் நடித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான "சாஹோ' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தற்போது பிரபாஸ், "சாஹோ' படத்தைத் தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் "ராதே ஷ்யாம்' படத்தில் நடித்து வருகிறார். இதன் இயக்குநர் கே.கே. ராதா கிருஷ்ணா.
இதைத் தொடர்ந்து வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் பிரபாஸ் நடிக்க உள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகி தேசிய விருது வென்ற "மகாநடி' என்ற படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இப்படத்தை இயக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாகப் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தீபிகா படுகோனே இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. தெலுங்கில் தீபிகா படுகோனே நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.