தமிழகத்தில் தொடர்கதைகளுக்காகத் தொடங்கப்பட்டிருக்கும் பிஞ்ஜ் செயலியில் வெளிவரவிருக்கிறது பிரபுதேவாவின் வாழ்க்கைத் தொடர். அதுவும் முதல் முறையாக ஆடியோ வடிவில். நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என இந்திய சினிமாவில் தனது முத்திரையை பதித்திருப்பவர் பிரபுதேவா.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் இவரது வாழ்க்கை வளரும் தலைமுறைக்கு நிச்சயம் உத்வேகம் தரும். அதற்கெல்லாம் விடை சொல்வது போல முதன்முறையாக தனிப்பட்ட வாழ்க்கை பக்கங்களை, தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான தகவல்களை, ரசிகர்களுக்காக வெளிப்படையாக, "டேக் இட் ஈசி பாலிசி' என்கிற தலைப்பில் மனம் திறந்து பேசுகிறார். தான் அதிகம் பேசாமல் அமைதியாகிப் போனதற்கான காரணம், தன் தாடிக்குப் பின்னால் இருக்கும் ரகசியம், அப்பாவின் முன் போன் பேசாதது ஏன், வாங்கிய முதல் சம்பளம், மைக்கேல் ஜாக்சன் சந்திப்பு, காதல், திருமணம், நண்பர்கள் என அனைத்தையும் பற்றியும் தன் குரலில் ஆங்காங்கே பகிர்ந்திருக்கிறார் பிரபுதேவா. கூடவே, பிரபு தேவாவின் ஞாபகங்களுக்கு தன் குரல் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார் ஆர்.ஜே தியாகு.
""இதுவரைக்கும் என்னை ஒரு நடிகராக, இயக்குநராக தெரியும். ஆனால் இந்த ஆடியோவில் என்னை ஒரு சாதாரணமான ஆளாக என்னை நீங்கள் புரிந்துக் கொள்ள முடியும். எனக்கே இது புதுமையான அனுபவம். உங்களுக்காக நான் பேசுகிறேன். என் வாழ்க்கையை. கண்டிப்பாக கேளுங்கள்'' என்று தெரிவித்துள்ளார் பிரபுதேவா.