திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஜென் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள்இணைந்து தயாரித்து வரும் படம் "ஜாங்கோ'. புதுமுகம் சதீஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மிர்ணாளினி ரவி நடிக்கிறார். அனிதா சம்பத், கருணாகரன், டேனியல் போப், வேலு பிரபாகரன், ரமேஷ் உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மனோ கார்த்திகேயன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் அறிவழகனின் உதவியாளர். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார் , ஷான் -லோகேஷ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.
படம் குறித்து இயக்குநர் பேசும் போது.... "" இது இந்தியாவின் முதல் டைம் லுப் படம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பைத்தான் ஹாலிவுட்டில் டைம் லுப் என்பார்கள். ஒருவனது வாழ்க்கை சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் அந்த கால இடைவெளிக்குள்ளேயே வாழ்வதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை. ஒருவன் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு எழுந்து தனது அன்றாட வேலையை முடித்து இரவு தூங்கி மறுநாள் எழுந்தால் செவ்வாய்க்கிழமையாக மாறாமல் திங்கள்கிழமையாகவே இருப்பது. அவனுக்கு மறுநாள் என்பதே மாறாமல் நடந்த சம்பவங்களே மீண்டும் நடக்கிறது.
அடுத்த அடுத்த நாள்களும் இதேபோல் திங்கள்கிழமையாகவே தொடர்கிறது. இதேபோல் இந்தப் படத்தில் கதையின் நாயகன் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாட்டிக்கொண்டு அதில் ஏற்படும் பிரச்னைகளை கடந்து அதிலிருந்து எப்படி வெளியே வருகிறான் என்பதே விறுவிறுப்பு கதை. இங்குள்ள எளிய மக்களுக்கும் புரியும் வகையில் இந்தக் கதையினை படமாக்கி வருகிறோம். சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இணை தயாரிப்பு சுரேந்திரன் ரவி. தயாரிப்பு சிவி குமார்.