இசைப்புரட்சி செய்தவர் நாதஸ்வர மன்னர் டி.என் ராஜரத்தினம் பிள்ளை. நாகஸ்வர கலைஞர்களுக்கு தனி மரியாதையைப் பெற்று தந்த சுய மரியாதைக்காரர்.
நாகஸ்வரம் மற்றும் தவில் வாசிப்பவர்கள் மேல் சட்டையினை களைந்துவிட்டு இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு வாசிக்கும் நிலையினை மாற்றி நல்ல அழகான பட்டு ஜிப்பாவினை அணிந்து தோளில் அங்கவஸ்திரத்தைப் போட்டுக் கொண்டு வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தியவர் டி.என்.ஆர்.
கோயில் உற்சவங்களில் சுவாமி புறப்படும் போது நடந்து கொண்டே வாசிக்க மறுத்த தனக்கு மேடை போட்டுத் தரச் சொன்னவர்.
ஒரு முறை மைசூர் மகாராஜா ஊர்வலத்தில் யானை மீதமர்ந்து கொண்டு பிள்ளையவர்களை வாசிக்கச் சொன்ன போது, கீழே நின்று கொண்டிருந்த அவர் "மகாராஜா! நீங்கள் யானை மீது அமர்ந்திருக்கும் போது நான் மட்டும் கீழே நின்று கொண்டு வாசிப்பதா, எனக்கும் அப்படி அமர்ந்து கொண்டு வாசிக்கும் முறையில் ஓர் யானையை ஏற்பாடு செய்யுங்கள்' என்று கூறினார். மனதில் எத்தனை துணிச்சல் இருந்தால் மகாராஜாவிடமே அப்படி கேட்டு இருப்பார்.
(டி.கே.எஸ்.கலைவாணன் எழுதிய என்னை வளர்த்த சான்றோர்கள் நூலிலிருந்து)