மக்களின் வாழ்வியலைச் சொல்லும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு. அப்படி ஒரு வலுவான கதைக்களத்தோடு உருவாகி வரும் படம் "ரெட் சேன்டில்'. ஆந்திர வனப்பகுதிகளில் செம்மரம் கடத்த சென்றதாக சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் பின்னணியில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. வெற்றி, "கே.ஜி.எஃப்' புகழ் கருடா ராம்,
எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வினோத் சாகர், மாரிமுத்து உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "கழுகு' சத்ய சிவாவிடம் பணியாற்றிய குரு ராமானுஜம் இந்தப் படத்தின் கதை எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... "" செம்மரம் கடத்தியதாக சுட்டுக் கொல்லப்பட்ட நம் அப்பாவி தமிழர்கள் எல்லாம் ஒரு செய்தியாகவே நம்மை கடந்து சென்றார்கள். அதன் பின்னணியைப் பார்த்தால், திகைப்பான சம்பவங்கள் நிறைய இருந்தன. அதை திரைக்கதையாக்கி சினிமாவுக்கான சமரசங்களோடு உருவாக்கி வருகிறோம்.
2015- ஆம் ஆண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன். செம்மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை பற்றி சொல்லும் இந்தப் படம், கமர்ஷியல் அம்சங்களோடு உருவாகி வருகிறது'' என்றார். சாம். சி.எஸ். இசையில் யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ரசூல் பூக்குட்டி சவுண்ட் எஃபெக்ட் கொடுக்கிறார்.