அரிசியைக் கழுவி ... பாத்திரத்தில் நீருடன் வேக வைத்தால்தானே சாதமாகும்? ஆனால் அஸ்ஸாமில் விளைவிக்கப்படும் "போக செளல்' அரிசியை அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டாம். இந்த மாயாஜால அரிசியை நாற்பது நிமிடம் நீரில் ஊற வைத்தாலே சாதமாகிவிடும். சாப்பிடலாம்..!
தெற்கு அஸ்ஸாமில் கோடை காலத்தில் (ஜூன் முதல் டிசம்பர் வரை ) "போக செளல்' அரிசியை நம்பியிருக்கிறார்கள். போக செளல்' அரிசியை "சேற்று அரிசி' என்றும் அழைப்பார்கள்.
அஸ்ஸாமின் நல்பாரி, பார்பேட்டா, கோல்பாரா, காமரூப், டரங், துப்ரி, சிரங், போங்கையாகோன், கோக்ராஜ்ஹர், பக்சா பகுதிகளில் "போக செளல்' பயிராகிறது. அஸ்ஸாம் நகர்ப்புற மக்கள் "போக செளல்' அரிசியை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை.
வயலில் உழைக்கும் மக்கள் "போக செளல்' அரிசியை 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைப்பார்கள். அரிசி பூ போல விரிந்து சோறு ஆகிவிடும். அதை, தயிர் அல்லது வெல்லம் அல்லது வாழைப்பழம் சேர்த்து உண்பார்களாம். தரமான "போக செளல்' அரிசியை பதினைந்து நிமிடம் தண்ணீரில் ஊற வைத்தால் போதுமாம் மல்லிகைப் பூ மாதிரியான சோறு ரெடி.
"போக செளல்' அரிசிக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.