வேலை வாய்ப்பை அள்ளித் தரும் ரயில்வே
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் ரயில்வே துறைக்கு முக்கிய இடம் உண்டு. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட அரசுத் துறை நிறுவனம் ரயில்வேதான். இல்லை என்று சொல்லாமல் எப்போதும் வேலை வாய்ப்புகளை க
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில் ரயில்வே துறைக்கு முக்கிய இடம் உண்டு. இந்தியாவிலேயே அதிக ஊழியர்களைக் கொண்ட அரசுத் துறை நிறுவனம் ரயில்வேதான்.
இல்லை என்று சொல்லாமல் எப்போதும் வேலை வாய்ப்புகளை கொண்டுள்ள துறை ரயில்வே தான் என்றால் மிகையில்லை.
உள்ளூர் இளைஞர்கள் அதிக அளவில் பயனடையும் வகையில் தற்போது உள்ளூர் மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப்படுவது அதன் சிறப்பு.
தமிழக அளவில் ரயில்வே துறையில் காலியாக உள்ள 2,500 வேலை இடங்களை நிரப்ப வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
காலிப் பணியிடங்களை படிப்படியாக நிரப்ப, ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத் தகவலை சென்னை ரயில்வே பணியாளர் வாரியத்தின் (ஆர்.ஆர்.பி.) தலைவர் எஸ். ராமசுப்பு தெரிவித்தார்.
இதற்கான கால அட்டவணை குறிப்பிட்ட இடைவெளியில் அறிவிக்கப்படும். அனைத்துப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகளின் முடிவுகள், தேர்வு நாளில் இருந்து 45 நாள்களுக்குள் வெளியிடப்படும்.
முதல் முறையாக தமிழ் மற்றும் இதர பிராந்திய மொழிகளிலும் வினாத்தாள்கள் வழங்கப்படுகின்றன.
தேர்வு எழுதுவோர் தாங்கள் விரும்பும் மொழியில் இந்த வினாத்தாள்களைப் படித்து, கொள் குறி (ஆப்ஜெக்டிவ்) முறையில் விடைத்தாள்களில் விடை அளிக்கலாம்.
கார்பன் பிரதியுடன் கூடியதாக இந்த விடைத்தாள்கள் இருக்கும். இந்த விடைத்தாளின் பிரதி உடனடியாக தில்லிக்கு அனுப்பப்படும்.
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் தேர்ச்சி பெற்றவர்களின் அசல் விடைத்தாளுடன், நகல் விடைத்தாளும் ஒப்பீடு செய்யப்படும். குறைந்த வேலையிடங்களுக்கு ஆயிரக் கணக்கானவர்கள் தேர்வு எழுதும்பட்சத்தில், முதல் கட்டமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். இப்போது ஆன்லைன் முறையில் தேர்வு எழுதுவதை வாரியம் ரத்து செய்துள்ளது எழுத்துத்
தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு வேலையின் தன்மையைப் பொறுத்து உளவியல் தேர்வு, உடல் திறன் தேர்வுகளும் நடத்தப்படும்.
நாடு முழுவதும் ஒரே நாளில் தேர்வு:
ரயில்வே தேர்வு வாரியத்தின் உத்தரவின்படி, முக்கிய பணியிடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே நாளில் இனி எழுத்துத் தேர்வுகள் நடத்தப்படும். இதன் மூலம் அந்தந்த ரயில்வே மண்டலங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகளை அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எழுதவும், தேர்ச்சி பெறவும் அதிக வாய்ப்பு கிடைக்கும்.
ரயில்வே பணியாளர் தேர்வுகள் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படுகின்றன. தேர்வு எழுதுவோர் தேர்வு எழுதி முடித்த பின் அவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத் தாள்களையும், விடைத் தாள்களுடன் சேர்த்து ஒப்படைக்க வேண்டும்.
இதில் விதிகளை மீறுவோர் மற்றும் இடைத்தரகர்கள் மீது உடனடியாக சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
100 பணியிடங்களுக்கு 40,000 பேர் போட்டி:
காலியாக உள்ள முன்பதிவு மைய அலுவலர் மற்றும் சரக்கு அலுவலர் (கிளார்க்) ஆகிய பணியிடங்களுக்கு சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள 45 மையங்களில் எழுத்துத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மொத்தமுள்ள 100 பணியிடங்களுக்கு இதுவரை 40,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ரயில்வே மருத்துவமனைகளில் செவிலியர், மருந்தாளுநர், ஆய்வக உதவியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட இணை மருத்துவப் பணியாளர்களுக்கான காலியிடங்களை நிரப்ப வரும் ஜூலை 25-ல் சென்னையில் எழுத்துத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
ரயில்வே துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள காலி பணியிடங்கள், இதற்கான எழுத்துத் தேர்வு விண்ணப்பங்கள், தேர்வு நாள், தேர்வு முடிவுகள் குறித்து அவ்வப்போது சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் பிரத்யேக இணையதளத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.