முகப்பு
இளைஞர்மணி

பாலம் கட்டிக் கொடுத்த பள்ளி மாணவர்!

மும்பை சாதே நகர். அந்தப் பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பள்ளி. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவ்வளவுதூரம் தினமும் நடக்க வேண்டும். அதுமட்டுமல்ல, இடையே 100 அடி அகலமுள்ள ஒரு சாக்கடை நதி.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:04 AM
பகிர்:

மும்பை சாதே நகர். அந்தப் பகுதியில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது பள்ளி. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அவ்வளவுதூரம் தினமும் நடக்க வேண்டும். அதுமட்டுமல்ல, இடையே 100 அடி அகலமுள்ள ஒரு சாக்கடை நதி. அழுக்கு, நாற்றம். நோய்களின் பிறப்பிடம் அந்தச் சாக்கடை நதி. அதைக் கடந்துதான் செல்ல வேண்டும். பெரும்பாலும் அதிகத் தண்ணீர் இருக்காது. சகதியாகத்தான் இருக்கும். சகதிக்குள்தான் நடந்து செல்ல வேண்டும்.

மழைக்காலம் வந்துவிட்டால் இன்னும் மோசம். அதில் சாக்கடை நதியின் தண்ணீர் பட்டு தோல் நோய்கள் வந்துவிடும். மலேரியா, டெங்கு காய்ச்சல்களும்.

தினம்தோறும் இப்படிப் பள்ளிக்குச் செல்வதில் உள்ள துன்பத்தால் நிறைய மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிடுவதும் அதிகம்.

மாணவர்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள எல்லாரும் அந்த சாக்கடைச் சகதியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். கடைக்குப் போக, காய்கறி வாங்க, அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல எல்லாம் அந்தப் பாதைதான். குர்லா, மன்கர்ட் ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்ல வேண்டும் என்றாலும் அந்தச் சாக்கடைச் சகதியைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

அந்தப் பகுதிக்கு வந்தார் 17 வயதுள்ள ஒரு மாணவர். பெயர் இசான் பால்பேல். தானே பகுதியில் அவர் வீடு இருக்கிறது. 12 ஆம் வகுப்பு மாணவர். "நிர்பய யுவ ப்ரதிஷ்தான்' என்ற தன்னார்வத் தொண்டு அமைப்பைத் தொடங்கியிருக்கிறார். அவர் தற்செயலாக சாதே நகர் பகுதிக்கு வந்தார்.

சாக்கடை நதி அவர் கண்களை உறுத்தியது. அந்தப் பகுதி மக்களுக்கு உடனே ஒரு பாலம் தேவை என்று நினைத்தார்.

ஒரு காங்கிரீட் பாலம் அமைத்தால் நல்லது என்று நினைத்தார். ஆனால் அதற்கு முனிசிபல் கார்ப்பரேஷனின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். நிறையச் செலவு வேறு ஆகும். என்ன செய்யலாம்? என்று யோசித்தபோது, ஒரு மூங்கில் பாலத்தை அமைத்தால் என்ன? எனத் தோன்றியது.

"மளமள'வென வேலைகள் நடக்க ஆரம்பித்தன. எட்டே நாட்களில் 4 அடி அகலமும் 100 அடி நீளமும் உள்ள மூங்கில் பாலம் தயார். இந்தப் பாலத்தில் 50 பேர் ஓரே நேரத்தில் நடந்து செல்ல முடியும். செலவு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம். பணம் கொடுத்தவர் இஷானின் அப்பா. இஷானின் அப்பா மும்பை தானே பகுதியில் வளர்ச்சிக்குறைபாடு உள்ள குழந்தைகளுக்குப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். தந்தையைப் போல பிள்ளை.

இஷான் மாதத்துக்கு ஒருமுறையாவது அந்தப் பகுதிக்கு வந்து பாலத்தைப் பார்க்கிறார். ஏதேனும் பழுது பார்க்க வேண்டியிருந்தால் உடனே சரி செய்கிறார்.

அந்தப் பகுதி மக்களுக்கு கழிவறை வசதி செய்து கொடுப்பது அவருடைய எதிர்காலத் திட்டமாம்.

அரசு, அந்தப் பகுதி நகராட்சி இவையெல்லாம் என்ன செய்கின்றன என்று கேட்கிறீர்களா?

""அந்தப் பகுதி அரசுக்குச் சொந்தமானது. அங்கு வசிக்கிற மக்கள் அரசின் இடத்தை ஆக்கிரமித்து நீண்ட நாட்களாக குடியிருந்து வருகிறார்கள். எனவே அவர்களுக்கு எந்த வசதியும் செய்து தர முடியாது'' என்கிறது அரசு தரப்பு.

""என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே? அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றவில்லை என்றால் எப்படி?'' என்று கேட்கிறார் இஷான்.

முழு கட்டுரையைப் படிக்க →