முகப்பு
இளைஞர்மணி

பெண்களுக்குத் தொழில் தொடங்க உதவும்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகமும் (தாட்கோ) தொழில் தொடங்க

Updated On : 2 பிப்ரவரி, 2016 at 12:21 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 9:55 PM

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகமும் (தாட்கோ) தொழில் தொடங்க உதவுகிறது. பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்படுகின்றன.

 நிலம் வாங்குதல்,  நிலம் மேம்படுத்துதல், பெட்ரோல்-டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

 இதுதவிர, மேலாண்மை இயக்குநர் விருப்புரிமை நிதி உதவி, இந்திய குடிமைப் பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கான நிதி உதவி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான நிதியுதவி, பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கான நிதியுதவி வழங்குதல் ஆகிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

 திட்ட மதிப்பீட்டில் தனிநபர் திட்டங்களுக்கு திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. குழு சுழல் நிதிக்கு ரூ.25 ஆயிரம், குழு பொருளாதார நிதியுதவித் திட்டத்தின் கீழ் திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.2.50 லட்சம் இவற்றில் எது குறைவான தொகையோ, அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

http://application.tahdco.com/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், கல்வித் தகுதி மற்றும் வயதுக்கான ஆதாரச் சான்றிதழ், விலைப்புள்ளி, திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு திட்ட அறிக்கை மற்றும் புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

நிலம் வாங்கும் திட்டத்துக்கு மூலப் பத்திரம், விற்பனை உடன்படிக்கை  பத்திரம், வில்லங்கச் சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நிலப் பத்திரம், நிலம் விற்பவரது சாதிச்சான்று விவரங்களைப் பதிவு செய்து அதற்கான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் ரூ.20 செலுத்தி விண்ணப்பிக்கலாம். இதுதவிர, உள்ளூரில் இணையதளங்களின் மூலம் கூட விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கு முன்னதாக, மனுதாரர் தான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள வங்கி மேலாளரை அணுகி ஆலோசனை கேட்பதும் நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.