வாருங்கள் விளம்பரத்துறைக்கு!
கீரைக்கடையாக இருந்தாலும் விளம்பரம் செய்ய வேண்டியது இன்றைய காலகட்டத்தில் கட்டாயமாகிவிட்டது. அப்பளத்திற்குக் கூட விளம்பரம் செய்கின்றார்கள். விளம்பரம் இல்லாமல் இப்போது எந்தப் பொருளுமே விற்பனையாவதில்லை.
கீரைக்கடையாக இருந்தாலும் விளம்பரம் செய்ய வேண்டியது இன்றைய காலகட்டத்தில் கட்டாயமாகிவிட்டது. அப்பளத்திற்குக் கூட விளம்பரம் செய்கின்றார்கள். விளம்பரம் இல்லாமல் இப்போது எந்தப் பொருளுமே விற்பனையாவதில்லை.
தற்காலத்தில் விளம்பரங்கள் அச்சு, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் என்ற பல வகையான ஊடகங்கள் வாயிலாகப் பலவிதங்களில் வெளியிடப்படுகின்றன. எப்படி வந்தாலும் அவற்றின் நோக்கம் வியாபாரத்தை அதிகரிப்பதுதான்.
விளம்பரத்துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பல வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகியும் வருகின்றன.
விளம்பரம் என்பது பல வகையான திறன் படைத்த பல்வேறு நபர்களின் கூட்டு முயற்சியாகும்.
இது பல துறைகள் இணைந்த ஒரு பெரிய துறையாக உள்ளது.
அச்சுத்துறை, புகைப்படத் துறை, நடிப்பு, திரைப்படம், ஓவியம், எழுத்து, பேச்சு உள்ளிட்ட பல துறைகள் இதனுள் அடங்கியுள்ளன.
இந்தத் துறையில் தனிநபர்களின் பங்களிப்பும் மிக அதிகமாக உள்ளது. உங்களிடம் எந்தத் திறமை உள்ளது என்பதை அறிந்து அதனை வளர்த்துக் கொள்ளுங்கள்.
தமிழ்மொழியில் ஆர்வம் அதிகம், தமிழ் இலக்கியத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கின்றீர்கள், நல்ல தமிழில் சொற்றொடர்கள் எழுத வரும்; கவிதை எழுத வரும் என்றால், வாருங்கள் இந்த விளம்பரத் துறைக்கு. தற்போது நல்ல தமிழில் அழகான சொற்றொடர் அமைப்பாளர்களுக்கு வேலை உள்ளது. மொழிபெயர்க்கத் தெரிந்தவர்களுக்கு, விளம்பரங்களில் வரும் ஜிங்கிள்களை சரியான முறையில் தமிழ் உட்பட பிற மொழிகளுக்கு மாற்றித் தர வேலை உள்ளது.
ஓவியர்கள், எழுத்தோவியர்கள், கணினி வரைகலைஞர்கள், நல்ல குரல் வளம் உள்ளவர்கள், மொழியியலாளர்கள், கவிஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், காணொளி பதிவாளர்கள், வெட்டி ஒட்டித் தரும் ஓவியர்கள்,
மாதிரிகளை உருவாக்கித் தருபவர்கள், வர்ணம் பூசுபவர்கள் என்று எந்தக் கலை அறிந்தவர்களுக்கும் இந்தத் துறையில் வேலை உள்ளது என்றே கூறலாம்.
நல்ல உடல்வாகும், அழகும் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கூட தற்போது மாடல்களாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் விளம்பரத் துறையில் உள்ளன.
தனித்தனிப் பகுதிகளாக செயல்படும் இந்த விளம்பரத்துறையின் அடிப்படையாகத் திகழ்கின்றவர்கள் இரண்டு பகுதிகளில் செயல்படுபவர்களாவர்.
1. வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் தேவையறிந்து முடித்துக் கொடுக்கும் எக்ஸிக்யூட்டிவ்
டிபார்மென்ட்
2. வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்து கொடுக்கும் கிரியேட்டிவ் டிபார்ட்மென்ட்.
முதல் பகுதியில் உள்ளவர்கள், வாடிக்கையாளர்கள் தொடர்பு, அவர்களது சந்தையை ஆய்வு செய்பவர்கள், அதன் அடிப்படையில் தேவையானதைக் கண்டறிந்து சொல்பவர்கள் என்ற நிலையில் செயல்படும் நபர்கள் உள்ளனர்.
இரண்டாவது பகுதியில் எழுத்தாளர்கள், கற்பனையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் உள்ளிட்ட, செயல்பட்டு விளைவைக் கொடுப்பவர்கள் உள்ளனர்.
எனவே, இந்த விளம்பரத் துறைக்குள் வருவதற்கு எந்தவொரு குறிப்பிட்ட படிப்பும் தேவையில்லை.
நீங்கள் இளம் வணிகவியல் படித்திருந்தாலும், விளம்பர நிறுவனத்தின் கணக்குப் பிரிவில் சேர வாய்ப்பு உள்ளது.
அதே சமயம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் சில கல்லூரிகளிலும் விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்பு என்ற இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
இந்தப் படிப்பு நேரடியாக விளம்பரத்துறைக்குள் வருவதற்கு சரியான வாய்ப்பைப் பெற்றுத் தருகிறது. ஏதேனும் வேலையில் சேர்ந்து கொண்டு அஞ்சல் வழியில் இந்தப் பட்டப்படிப்பைப் படிக்க முடிகிறது.
ஆண்டிற்கு 20 சதவீத வளர்ச்சியைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் இந்த விளம்பரத்துறையில் ஒவ்வொரு மாநிலத் தலைகரங்களிலும் செயல்படும் விளம்பர நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு வேலைவாய்ப்பு பற்றி அறியலாம். அல்லது இணையத்தில் http://www.naukri.com/advertising-jobs என்ற வலைதளம் சென்று தகவல்களைப் பெறலாம்.
விளம்பரத் துறையின் வளர்ச்சி,அதில் வேலைவாய்ப்புகள் பற்றி மேலும் அறிய http://employmentnews.gov.in/Career_Advertising_Publicity.aspஎன்ற வலைத்தளத்தை பார்க்கவும்.