உணவுத் தொழில்நுட்பம் சார்ந்த பொறியியல் படிப்பு!
உலகம் முழுவதும் பாக்கெட் மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்டு உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
உலகம் முழுவதும் பாக்கெட் மற்றும் டப்பாக்களில் அடைக்கப்பட்டு உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகமும் நடைபெற்று வருகிறது.
உணவுகளை டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு உணவு பதப்படுத்தும் தொழில் நுட்பம் தேவைப்படுகிறது. அதைத் தெரிந்து கொள்ள உணவு சார்ந்த பொறியியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு தேவைப்படுகிறது.
Advertisement
உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கான மத்திய அமைச்சகத்தின் நேரடிக் கண்காணிப்பில் தஞ்சாவூரில் "இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்' (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் புராஸஸிங் டெக்னாலஜி) உணவு சார்ந்த பொறியியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை அளித்து வருகிறது.
இதில் பி.டெக். உணவு பதப்படுத்தும் பொறியியல் 4 ஆண்டுபடிப்பு, எம்.டெக். உணவு பதப்படுத்தும் பொறியியல், எம்.டெக். உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இரண்டு ஆண்டு பட்ட மேற்படிப்பு, பி.ஹெச்டி உணவு பதப்படுத்தும் பொறியியல், பி.ஹெச்டி உயிரித் தொழில்நுட்பம் ஆகிய ஆராய்ச்சிப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.
இந்தப் படிப்புக்கள் குறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநர் சி.அனந்தராமகிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
""இந்த படிப்பில் சேர்வதற்கு பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்று, மத்திய அரசின் நுழைவு தேர்வான ஜெ.இ.இ.யில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் கிடைக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங் பட்டியல் இடப்பட்டு , மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். முதலில் 4 ஆண்டு பி.டெக் உணவு பதப்படுத்தும் பொறியியல் வகுப்பில் ஆண்டுக்கு 60 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தப் படிப்பின் நோக்கமானது, தனிறைவான உணவு உற்பத்தி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தொழில் நுட்பத்தை உருவாக்குதல் ஆகும்.
அறுவடைக்குப் பின்னர் ஏற்படும் தானிய இழப்புக்களைக் குறைத்து மேம்பட்ட சேமிப்பு, உணவு தானியங்களின் ஆயுட் கால நீடிப்பு, உணவு பதப்படுத்துதல், புத்தாக்க உணவுப் பண்டங்கள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை முன்னிறுத்தி, உணவு உற்பத்தி, சேமிப்பு, பதப்படுத்துதல் தொழிற்சாலைகளில் பணி புரிவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும், உணவுத் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்கும் ஏற்றவாறு உணவு பொறியியல் மற்றும் அறிவியல் பாடத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
என்.ஏ.பி.எல். என்ற தேசிய நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற "ஃபுட் அலயன்ஸ் லேப்' அமைக்கப்பட்டுள்ளது. எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. என்ற மத்திய அரசு நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பொருள்களில் கலப்படம், கலப்படத்தின் தன்மை, எவை கலப்படம் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய எங்களிடம் ஆய்வுக்கூடம் உள்ளது. புட் பேக்கேஜ் அண்டு ஸ்டோரேஜ் என்ற ஆய்வு கூடம் உள்ளது. "ஃபுட் புராஸசிங் பிசினஸ் அன்டு ட்ரெயின்ங் இன்குபேசன் சென்டர்' என்ற ஆய்வுக் கூடமும் உள்ளது.
இந்த ஆய்வுக் கூடங்களில் உணவு பதப்படுத்துவதற்கான தொழில்நுட்ப ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்வார்கள். உணவுப் பொருள்களின் தரப் பரிசோதனை செய்தல், உணவு தானிய இழப்பீட்டினைத் தவிர்க்க தொழில் நுட்ப ஆலோசனைகள் குறித்த பாடங்களும், பயிற்சியும், உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டுதல் குறித்த தொழில்நுட்ப பயிற்சிகளும், உணவு மாதிரிகளுக்கான தர நிர்ணயம் செய்தல் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் படித்தவர்களுக்கு உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் ஆய்வுப்பணி, உணவு தர பரிசோதனை மையங்களில் வேலைவாய்ப்பு, மத்திய அரசின் உணவு தரச்சான்று அளிக்கும் நிறுவனத்தில் வேலை, "ஃபுட் புராஸஸிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா' போன்ற நிறுவனங்களில் வேலை, மத்திய தானியசேமிப்புகிடங்குகளில் வேலை, ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை, மசாலாப் பொடி, ஜாம், சர்பத், ஊறுகாய், மாம்பழக்கூழ் உள்ளிட்டவை தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை என பல விதமான வேலைகளும் இந்த படிப்பின் மூலம் மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன'' என்றார்.