முகப்பு
இளைஞர்மணி

வணிகவியலும் மனித வளமும்!

தனித்தன்மை, ஆளுமைத்திறன், நிர்வாகம் ஆகியவற்றுடன் கணிதம், வணிகம் இணைந்தால் சுயதொழில் செய்யலாம் அல்லது நிறுவனங்களில் அதிகாரிகளாக வேலைக்குச் சேரலாம்.

Updated On : 6 பிப்ரவரி, 2018 at 12:18 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:40 PM

தனித்தன்மை, ஆளுமைத்திறன், நிர்வாகம் ஆகியவற்றுடன் கணிதம், வணிகம் இணைந்தால் சுயதொழில் செய்யலாம் அல்லது நிறுவனங்களில் அதிகாரிகளாக வேலைக்குச் சேரலாம்.
எம்.காம். ஹியுமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் ( M.COM. HUMAN RESOURCE  DEVELOPMENT) என்ற இரண்டு ஆண்டு முதுகலை பட்டமேற்படிப்பு, சுயதொழில் தொடங்கி சிறப்பாக நடத்துவதற்குக் கற்றுத் தரும் படிப்பாகும்.
இந்த படிப்பு குறித்து சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் அதன் துறைத்தலைவர் ராஜேஸ்வரியிடம் பேசினோம்:
""ஆளுமைத்திறன் மேம்பாடு, தலைமைப் பண்பு, நேர மேலாண்மை உள்ளிட்ட பல வகையான பயிற்சிகளை இந்தப் படிப்பு வழங்குகிறது.
இந்தப் படிப்பில் சேருவதற்கு பி.காம், பி.பி.ஏ. மற்றும் கணக்குப் பதிவியலை விருப்பப் பாடமாக படித்துள்ள இளங்கலை பட்டம் பெற்றவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இந்தப்படிப்பில் முதலாம் ஆண்டு பயில்பவர்களுக்கு அலுவலகச்சூழல், கணக்கியில், கணக்குப்பதிவியல், மனிதவளமேம்பாடு, நிர்வாகநடத்தை உள்ளிட்டவை குறித்து பாடமும் பயிற்சியும் அளிக்கப்படும். தொடர்ந்து கணினியை நிர்வகித்தல், கையாளுதல், கணினியின் பயன்பாடு, சந்தை
மேலாண்மை, ஆராய்ச்சி வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து வகுப்புகள் நடைபெறும். பின்னர் 6 மாதகாலம் உள்ளூர் அல்லது வெளியூரில் உள்ள பெரிய நிறுவனங்களுக்குச் சென்று களப்பயிற்சி பெற வேண்டும். வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிலும் கள ஆய்வு மேற்கொள்ளலாம். பின்னர் தொழில் முனைவோர் மேம்பாடு, தொழிலாளர் சட்டங்கள், செயல்திறன் மதிப்பீடு, மேலாண்மைத் திறன் வளர்ப்பு, தொலைதொடர்புத் திறன் மேம்பாடு உள்ளிட்டவை பாடமாகவும் பயிற்சியாகவும் அளிக்கப்படும். மேலும் வணிகவரி, கலால்வரி, மறைமுகவரி உள்ளிட்ட பல வகையான வரிகள் குறித்து பாடம் நடத்தப்படும். நிதி நிர்வாகம், வணிக நிர்வாகம், வங்கி மேலாண்மை குறித்து அந்தந்த துறையில் சிறப்பாகப் பணியாறுபவர்கள் பயிற்சி அளிப்பார்கள்.
இறுதியில் ஏதாவது ஒரு நிறுவனத்திற்கு சென்று 90 மணிநேரம் ஆய்வு மேற்கொண்டு, அந்த நிறுவனத்தின் புள்ளி விவரங்களைச் சேகரிக்க வேண்டும். அதில் ஏதாவது குறைபாடு உள்ளதா? சீர்திருத்தம் செய்ய வேண்டுமா என்பது குறித்து திட்ட அறிக்கை தயாரித்து, கருத்தரங்கில் சமர்ப்பிக்க வேண்டும். 
பொதுவாக நிர்வாகவியல் படித்தோடு, வணிகவியலும் படித்திருப்பதால் இந்தப் படிப்பு படித்தவர்களுக்கு, பல நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி வருகின்றன. இதைப் படித்தவர்கள் தொழில் முனைவோராக ஆகலாம். பெரிய நிறுவனங்களில் மனிதவளமேம்பாட்டு அதிகாரியாக வேலைக்குச் சேரலாம். திறமையும், ஆர்வமும் உள்ளவர்களுக்கு இந்த படிப்பு சிறந்த படிப்பாகும்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.