முகப்பு
இளைஞர்மணி

இணைய வெளியினிலே...

பாதுகாப்பான இடத்தில் நின்றபடி பார்த்து ரசிக்கிறவர்களிடம்...கோபித்துக் கொண்டு போகிறது கடல்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:


முக நூலிலிருந்து....

பாதுகாப்பான இடத்தில் நின்றபடி பார்த்து ரசிக்கிறவர்களிடம்...
கோபித்துக் கொண்டு போகிறது கடல்.

உமா மோகன்

Advertisement


அடுக்கி வைக்க வைக்கக் கலைந்து விடுகிறது...
வாழ்க்கை.

சுசீலா மூர்த்தி


தாங்குமிடத்திலெல்லாம் மிதவையாகிப் போகிறது...
அகதியாகித் திரிந்த மனது.

நா.வே.அருள்

பறவைகள் பறப்பதிலிருந்து விடுதலை கேட்பதில்லை அவை எப்போதும் பறக்கின்றன.

- ந.குமரன்விஜி



இலக்குகளை முடிவு செய்து கொண்டு, பயணத்தைத் தொடங்குபவன் கற்களுக்கும் முட்களுக்கும் பழகிக் கொள்ளத் தயங்க மாட்டான்.

கொஞ்ச தூரத்தில் "யு' டர்ன் போட்டு திரும்பிப் போகப் போகிறவனுக்கு இலக்குகளை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.

நாணற்காடன் சாரா

சுட்டுரையிலிருந்து...


எனை...
என் பாதையில் நடக்கவிடுங்கள்.
பூவாகட்டும்...
முள்ளாகட்டும்...

மாதொருபாகன்

அத்தனை குச்சிகள் உரசியும் பற்றி எரியாமல் மழுங்கிப் போகின்றன தீப்பெட்டிகள்...
அலுவலகத்துக்கும் கடனுக்கும் வீட்டுக்குமான பதில்களுக்குப் பின் அசந்து போகிறார்கள் அப்பாக்கள்.

லக்ஷ்மிவ்வா

தாங்கிக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் தான்
மரத்தில் அமர்கின்றன பறவைகள்...
தாங்கிப்பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தான்
மண்ணில் விழுகின்றன சருகுகள்...
தொடக்கத்திலும் முடிவிலும் இடைப்பட்ட காலத்திலும்
யாரையும் சாராமல் யாருமில்லை.

அழகிய கவிதை

வலைதளத்திலிருந்து...

தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் காணாத ஒருவகை நிலப்பரப்பை ஒன்றிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அதாவது இன்றைய நெல்லை-தூத்துக்குடி மாவட்டப் பகுதியில் காணலாம். அவை தேரிக்காடுகள் என்று அறியப்படுகின்றன. சிவந்த மண்ணுடன் பரந்து விரிந்திருக்கும் இந்தத் தேரி காடுகள்.
பாலை நிலத்திற்கும் இந்தத் தேரிக்காடுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. பாலை நிலம் தண்ணீர் இல்லாத வறண்ட நிலப்பரப்பாகும். ஆனால் இந்தத் தேரிகளின் மணற்குன்றுகள் மழை நீரைத் தேக்கி வைக்கும் இயற்கை அணைகள்.
மேற்குமலைத் தொடரில் அமைந்துள்ள முக்கிய கணவாய் ஆரல்வாய்மொழி கணவாய் ஆகும். மேற்கிலிருந்து வலுவான வேகத்தில் வீசுகிற காற்று மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து செல்ல இருக்கிற ஒரே வழி, இந்த ஆரல்வாய்மொழி கணவாய் மட்டுமே. அது கடந்து வருகிற பாதை எங்கும் சிதறி பரந்து கிடக்கிற செம்மணல் துகள்களை வாரி சுருட்டி எடுத்துச் செல்கிறது வலுமிக்க இந்த பருவக்காற்று. வலுவாக மலையைக் கடந்து வருகிற இந்தக் காற்று, கடலை நெருங்க நெருங்க வலுவிழந்து போவதால், தான் சுமந்து வருகிற மணல் துகள்களை மலைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் தூவிவிட்டு போய் விடுகிறது.
இந்த நிகழ்வு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையினால் பருவகாலங்களில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டதன் விளைவே தேரிக்காட்டின் மணல் குன்றுகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments