""ஓய்வே இல்லாமல் வேலை செஞ்சுக்கிட்டு இருக்கேன். பலன் தான் கிடைக்க மாட்டேங்குது'' என்று சலிப்புடன் சொல்பவர்கள் நிறையப் பேரை பார்த்திருப்போம். இப்படி ஓய்வே இல்லாமல் உழைத்தால் பலன் எப்படி கிடைக்கும்? மூளையும் உடலும், சோர்வடைந்து செய்கின்ற வேலையில் தரம் இல்லாமல் போய்விடக் கூடும். இன்னும் சிலர் அதையும் தாண்டி சாப்பிடாமல் வேலை செய்ததாகப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அதுவும் ஆற்றல் இழப்பை ஏற்படுத்தி சோர்வடையச் செய்துவிடும்.
இன்னும் சிலரோ இரவு, பகல் பாராமல் வேலை செய்ததாக சொல்லிக் கொள்வார்கள். இதுவும் தவறான செயல்தான்.
இப்படி செய்வதால் வேலை வேண்டுமானால் முடிந்துவிடும். ஆனால் இறுதியில் கிடைக்கின்ற பலன் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்காது.
அப்படி என்றால் எப்படித்தான் ஒரு பணியைச் செய்ய வேண்டும் என்று கேள்வி எழக்கூடும். பணி நேரங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு முறை சிறிய ஓய்வு எடுத்துக் கொள்வது அவசியம். அத்துடன் வழக்கமான நேரங்களில் வழக்கமான உணவைச் சாப்பிட்டுவிட்டு, இரவில் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரை தூங்கி எழுந்தால், உடலின் ஆற்றல் அதிகரிப்பதுடன், வேலையில் கவனம் செலுத்தி சிறப்பான உற்பத்தியை, வெளிப்பாட்டை உருவாக்க முடியும்.
ஒரு நிறுவனத்தின் செயல் அதிகாரி திறன் மிக்கவராக இருந்தால் மட்டுமே ஒரு
நிறுவனத்தின் உற்பத்தியையோ அல்லது அதன் இலக்கினையோ சிறப்பாக எட்ட முடியும். அப்படி என்றால் அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி ஆற்றல் மிகுந்தவராக இருக்க வேண்டியது
அவசியம். அத்தகைய ஆற்றலை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகள் பல இருக்கின்றன. செயல் அதிகாரிகள் மட்டுமின்றி. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரும், ஆற்றலை, திறனை அதிகப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஒவ்வொருவருக்கும் உடல்ரீதியாக, மனரீதியாக, உணர்வுரீதியாக பலவிதமான உணர்வு நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஆற்றலை
ஒவ்வொருவருக்கும் தரக்கூடியவை. அது அவரவர்களின் சொந்த இயல்பை பொறுத்து மாறுபடக்கூடும்.
இருப்பினும் கூட, ஒவ்வொரு மனிதனும் அலுவலகத்தில் ஒருவிதமாகவும்
அதாவது வணிக இடங்களில் ஒருவிதமாகவும் , தனிமனித நெறிகளில் ஒருவிதமாகவும் பயணிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
அதுபோல்தான் நான்கு விதமான உணர்வு நிலைகளையும் இடத்திற்குத் தகுந்த
வாறு வேறுபடுத்தி, தேவையான இடங்களில் அதன் திறனை அதிகரிக்க செய்பவர்களால் மட்டுமே செய்யும் தொழிலில் சிறப்பான இடத்தை அடைய முடியும்.
உதாரணமாக விளையாட்டு வீரர் ஒருவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியம் தனிமனிதனாக உலாவரும் பொழுது தேவையான உணவு, தேவையான தூக்கம், தேவையான உடற்பயிற்சி ஆகியவற்றை மட்டுமே செய்வார். அதே சமயம் அவர் ஒரு விளையாட்டு வீரராக பரிணமிக்கும் போது அவரது உடலுக்கு தேவைப்படும் ஆற்றல், அந்த விளையாட்டுக்கு தேவையான முக்கிய விஷயங்கள் மற்றும் அது குறித்த விழிப்புணர்வுடன் பயணிப்பார். இப்படி தேவையான இடங்களில் தங்களின் முழு திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் நான்கு விதமான உணர்வு நிலைகளையும் செயல்படுத்த தெரிந்தவர்கள் எத்துறையிலும் ஜெயிக்க முடியும்.
திறன்களை அதிகரிக்க, அதிகரிக்க அதற்கான ஊட்டச்சத்தும் அவசியமாகிறது. அந்த ஊட்டச்சத்தினை கொடுக்கக் கூடிய உணவு வகைகளை பலமுறை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்வது ஆற்றலை அபரிமிதமாக அதிகப்படுத்தும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.