இளைஞர்மணி

எதிர்கொள்ளும் சிக்கல்கள்!

"என்னடா ஊரே மாறியிருக்கிறது?' பல ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பும்போது பலரின் மனதில் எழும் கேள்வி இது.

ந.முத்துமணி

"என்னடா ஊரே மாறியிருக்கிறது?' பல ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பும்போது பலரின் மனதில் எழும் கேள்வி இது. அப்படித்தான் கால ஓட்டத்தில் உலகமும் வேகமாக மாறிக் கொண்டே இருக்கிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்த சமுதாயம் அடியோடு மாறியிருக்கிறது. நமது தாத்தா-பாட்டிகள் இளமையில் சந்தித்த சிக்கல்களுக்கும், நமது பெற்றோர்கள் இளமையில் எதிர்கொண்டசிக்கல்களும் ஒன்றாக இருந்ததில்லை. நமது நிலைமையும் அது தான்.

இன்றைய இளைஞர்கள்மற்றும் அவர்களின் மூத்தவர்கள் முன்பு தென்படும் மிகமுக்கியமான பிரச்னை, தகவல் தொடர்பு இடைவெளியாகும். இது நமது மனநிலை, நடத்தையை வெகுவாக பாதிக்கிறது. தனித்துவத்தோடு சிறந்து விளங்கினாலும், புதியதலைமுறை இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் இருந்துவிடுபட அவர்கள் மீது அக்கறை காட்டாமல் இருக்க முடியவில்லை.

அண்மைகாலமாக அவை வெளிப்படையாக தெரியத் தொடங்கியுள்ளன. உசேன்போல்ட் வேகத்திற்கு மாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கையின் போக்கு புதுப்புது சிக்கல்களின் பிறப்புக்கு காரணமாகிக் கொண்டே இருக்கின்றன. அவற்றைத் தொகுத்து, இன்றைய இளைஞர்கள் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களை பட்டியலிட்டிருக்கிறோம். இந்த சிக்கல்களை சுட்டிக்காட்டுவது மட்டுமல்ல, அவற்றில் இருந்து விடுபடுவதும் நமது நோக்கமாகும்.

கல்வி பிரச்னைகள்:

இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் எல்லா சிக்கல்களின் தோற்றுவாயாக கல்வியின்மை இருக்கிறது. கலங்கிப்போன நெஞ்சினராய் இளைஞர்கள் தவிப்
பதற்கு மூலக்காரணம் முறையான கல்வி கிடைக்காமைதான்.

உயர்நிலைப்பள்ளியில் இடைநிற்றல் அதிகமாக இருக்கிறது. உயர்கல்வியைச் சென்றடையும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது. நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தொழில் அல்லது வேலைவாய்ப்புகள் மங்கி, சம்பாதிக்கும் திறனை மழுங்கடித்துவிடுகிறது. இந்தச் சிக்கலை தீர்க்க சீரான கல்வி கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். குழந்தைகளின் கல்வியில் பெற்றோர் தீவிர கவனம் செலுத்துவது இச்சிக்கலில் இருந்து இளைஞர்கள் விடுபட உறுதுணையாக இருக்கும்.

பிறரின் தாக்கம்:

நம்மைச் சுற்றி வாழும் பிறரின் தாக்கம் அல்லது அழுத்தத்தில் இருந்து விடுபடமுடியாமல் தவிக்கும் நிலை தொடர்ந்து கொண்டுள்ளது. தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் நுகர்வு புதிய வகையான தாக்கத்திற்கு வழிவகுத்துள்ளது. அடுத்தவர்களின் வாழ்க்கையைப் பார்க்கும்போது, அவர் களுடன் பழகும் வாய்ப்புக் கிடைக்கும்போது, அவர்களின் தாக்கம் நமக்கு இருக்கத்தானே செய்யும்? இதுதவிர, போதைப்பொருள் நுகர்வு, சமூகவலைதளங்களில் ஆபாச படங்கள்அல்லது தகவல்கள் பகிர்வுஆகியவை பிறரின் தாக்கத்தால் விளைவது தான். இளம் தலை முறையினரோடு பழகுபவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குபெற்றோர்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுதல் வழங்கலாம்.

மன அழுத்தம்:

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர்களை நெரித்துக் கொண்டிருக்கிறது மன அழுத்தம். மனநல ஆய்வில், 14 சதவீத பதின்ம வயதினர், முதிர்வயதை அடைவதற்கு முன்பே மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டுவிடுவதாக தெரியவந்துள்ளது. பதின்ம வயதினரிடையே மன அழுத்தம் வேகமாகப் பரவி வருவதற்கு, தொழில்நுட்பத்தையும், ஒழுங்கின்மையையும் காரணமாகக் கூறுகிறார்கள். நம்மை சுற்றி இருப்போரின் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி நாம் நடந்து கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வி அடையும்போது மன அழுத்தம் ஏற்படுகிறது. தனிமையை நாடுதல், கல்வியில் நாட்டம் குறைதல், சீரற்ற உறக்கம் அல்லது உணவுப்பழக்கம் போன்றவை மன அழுத்தத்திற்கான அறிகுறியாக இருக்கலாம். மன அழுத்தம் இருப்பதைக் கவனித்து சரி செய்ய வேண்டும்.

பெற்றோரின் நெருக்கடி:

பெற்றோர்கள் தரும் நெருக்கடிகள் இளைஞர்களின் இருப்பை பதற்றமாக்கிவிடுகின்றன. குறிப்பாக கல்விரீதியான நெருக்கடிகள் இளைஞர்களைச் சோர்வடையச் செய்துவிடும். சமூகத்தில் மதிப்புவாய்ந்த பொறுப்புகளில் இருக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் கலை அல்லது கலை சார்ந்த துறைகளைத் தொழிலாக மேற்கொள்ள நினைத்தால், அதை ஏற்க முன்வருவதில்லை. அவர்களுடைய விருப்பங்களை முடக்கி விடுகின்றனர். இது இளைஞர்களை முடக்குவதோடு, அவர்களின் தன்னம்பிக்கையை சீர்குலைத்துவிடுகிறது. தங்களுடைய பிள்ளைகளை பிறருடன் ஒப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் ஆபத்து நிறைந்தது என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

உடல் அழகு சார்ந்த கவலை:

இளைஞர்கள் மனதளவில் எதிர்கொள்ளும் இன்னொரு சிக்கல், உடல் அழகு சார்ந்தகவலையாகும். தோல் நிறம், உயரம், உடற்கட்டு, முக வெட்டு போன்ற பல்வேறு கூறுகளின் அடிப்படையில் அழகு நிர்ணயிக்கப்படுவதால், அதில் குறைபாடு இருக்கும் இளைஞர்களின் தன்னம்பிக்கை நசுக்கப்படுகிறது. உடல் பருமன் இருப்பவர்களை, கருப்பு நிறம் உள்ளவர்களைக் கேலிபொருளாக்குவது இளம் வயதினரின் மனநலனை வெகுவாகப் பாதிக்கிறது.

போதைப் பழக்கம்:

விரல் நுனிகளில் சிகரெட்அல்லது கைஇடுக்கில் மதுகோப்பை வைத்திருப்பது தான் "ஸ்டைல்' என்ற கருத்து, திரைப்படங்களின் வாயிலாக இளைஞர்கள் மனதில் விதைக்கப்பட்டுள்ளது. அந்த "தீய' பழக்கங்களைக் கற்றுக் கொள்ள பதின்ம வயதினரை திரைப்படங்கள் தூண்டுகின்றன. தங்களுடைய மனதுக்குப் பிடித்த கதாநாயகன் திரைப்படக் காட்சிக்காக நடித்துக் காட்டும் ஒன்றை தங்களுடைய சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்க இளைஞர்கள் நினைக்கின்றனர். விரும்புகின்றனர். போதைப் பழக்கம் தொற்றிக் கொள்கிறது. தீயபழக்கங்கள் உடல்நலனை மட்டுமல்ல, மனநலனையும் பாதித்துவிடுகிறது. படிப்பில் கவனம் இல்லாமல் போகிறது. இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் போதைப் பழக்கமும் ஒன்றாகும்.

தரமில்லாத கல்வி:

தரமான கல்வி, அனைவரின் உரிமையாகும். அது கிடைக்காவிட்டால், எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எல்லாருக்கும் தரமான கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. பணவசதி படைத்தவர்களின் பிள்ளைகள் தரமான கல்வியைக் கற்கும் வாய்ப்புகள் உள்ளபோது, ஏழைகள், நடுத்தர மக்களின்பிள்ளைகள் தரமான கல்வியைக் கற்றுத் தராத, கட்டணம் குறைவான கல்விநிலையங்களில் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. இது அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையை மிகுந்த சிக்கல்களுக்கு உள்ளாக்குகிறது.

வறுமை:

வறுமையால் நல்ல கல்வி கிடைக்காதநிலையில் அதன் தொடர்ச்சியாக நல்ல வேலை கிடைக்காமல் போவது, நல்ல வருமானம் இல்லாமல் போவது, என வறுமை எனும் சிக்கலில் இளைஞர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். இது முந்தைய தலைமுறையினர் எதிர்கொண்டசிக்கல்களை பரிசாக தந்துவிடும்.

வேலைவாய்ப்பின்மை:

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுவேலைவாய்ப்புக்கும் பொருந்தும். நல்ல கல்வி வாய்ப்பு கிடைக்கப்பெற்றவர்களுக்கே நல்ல வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. நல்ல வேலைவாய்ப்பு, கைநிறைய பணத்தை மட்டுமல்ல, சமூகத்தில் நன்மதிப்பையும்ஏற்படுத்தித் தருகிறது. நல்ல கல்வி கற்க வாய்ப்புக் கிடைக்காத இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

உடல்பருமன், இதர உடல் நலக்கோளாறுகள்:

உடற்பயிற்சியின்மை, தவறான உணவுப்பழக்கம், ஆரோக்கிய மற்ற மற்றும் சோம்பலான வாழ்க்கைமுறை ஆகியவை, உடல்பருமன் உள்ளிட்ட உடல்நலக்கோளாறுகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. ஓடிவிளையாடிய காலம்போய், கணினியில் விளையாடும் காலமாகிவிட்டது. இது இளம் வயதினரின் உடலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உடல்பருமன், உடல்நலக் கோளாறுகள் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளாகிவிடுகின்றன்.

பொருள்நுகர்வுத்தன்மை:

செல்லிடப்பேசியின் பொத்தானை சொடுக்கினால் நமக்குத் தேவையான பொருள்கள் வீடு வந்து சேர்ந்துவிடுகிறது.

இதனால், நுகர்வுத்தன்மை இளைஞர்களிடையே அதிகரித்திருக்கிறது. நுகர்வுத்தன்மைஅதிகமாவதால் உடல் நலன் கெடுகிறது. விருப்பமானவற்றை வாங்க இளம் வயதினரிடம் பணம் இல்லாதநிலை வரும்போது, அவர்கள் மனதில் பல்வேறு உணர்வுகள் தோன்றி, அது அவர்களுடைய நடத்தையில் மாற்றத்தைக் கொண்டு வருகிறது.


இளம் வயதினர் எதிர்கொள்ளும் இந்தச் சிக்கல்களை இளம் வயதினரால் மட்டுமே தீர்க்க முடியாது. இத்தகைய சிக்கல்களை வேறுவிதங்களில் தங்களுடைய இளமைக் காலத்தில் எதிர்கொண்ட பெரியவர்கள், அந்த அனுபவங்களின் அடிப்படையில், இப்போதைய இளம்வயதினர் எதிர்கொள்ளும்சிக்கல்களுக்கான தீர்வுகளை ஆலோசனை வடிவில் வழங்க வேண்டும். "அதைச் செய்; இதைச் செய்' என்று ஆணையிடக் கூடாது. ஏனென்றால், மூத்த தலைமுறையினரிடம் இயல்பாகப் பழக முடியாத புதிய சிக்கலை இளைஞர்கள் உணரத் தொடங்கிவிடுவார்கள்.

வேலைவாய்ப்பு, தரமான கல்வி, ஆரோக்கியமான சிந்தனையை ஏற்படுத்தும் காட்சி ஊடகங்கள் ஆகியவற்றை இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க அரசும் முனைப்புக் காட்டினால், இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் பலவற்றை எளிதில் புறமுதுகிட்டு ஓடச் செய்துவிட முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு : மோடி

எய்ம்ஸ் பணிகளை முடக்கும் திமுக: அண்ணாமலை! | செய்திகள்: சில வரிகளில் | 25.02.26

”அரசியல்வாதிகளுக்கு பாடமாக விளங்கியவர்!” நல்லகண்ணு குறித்து முதல்வர் முக ஸ்டாலின்!

காதல் ரீசெட் ரிபீட் டிரைலர்!

பிரதமர் மோடியை கைகூப்பி வரவேற்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!

SCROLL FOR NEXT