இளைஞர்மணி

தேர்ந்தெடுங்கள்... முன்மாதிரியாளரை!

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் மாடல் எனும் முன்மாதிரியாக யாரேனும் ஒருவர் இருப்பார்.

கோமதி எம். முத்துமாரி


வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு ரோல் மாடல் எனும் முன்மாதிரியாக யாரேனும் ஒருவர் இருப்பார். அதிலும் பதின் வயதினர், இளைஞர்கள் குறித்து சொல்லவே தேவையில்லை. நேரடியாகவோ அல்லது ஊடகங்களிலோ பிரபலமான ஒவ்வொருவரையும் பார்க்கும்போதோ அவர்களது குறிப்பிட்ட ஒரு சில நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர்களைப் போலவே நடந்துகொள்வார்கள். சிலரை தங்கள் ரோல் மாடலாகவும் வைத்துக் கொண்டு பின்பற்றுவார்கள்.

வாழ்க்கையில் சந்திக்கும் அல்லது தெரிந்து கொள்ளும் ஒரு சிலரை முன்மாதிரியாக எடுத்துக் கொள்வது சாதாரணமானதே. ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் முன்மாதிரியாளர்கள் மறைமுகமாகவோ, நேரடியாகவோ அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

வாழ்வில் வெற்றி பெறும் இளைஞர்கள் பெரும்பாலானோருக்கு அவர்கள் வாழ்க்கையில் சந்தித்த ஒருவர் முன்மாதிரியாக இருந்திருப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. குறிப்பாக பதின்வயதினர் மற்றும் இளைஞர்கள் குறிப்பிட்ட ஒருவரை ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு அவர்களின் நடத்தைகள், குணாதிசயங்களைப் பின்பற்றி சாதித்தும் காட்டுகின்றனர். முன்மாதிரியாளர்களின் நடத்தைகள், சாதனைகள் மூலமாக தங்கள் இலக்குகளை அடைவதற்கான உத்திகளையும் இன்றைய இளைஞர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.
ஆனால், இந்த முன்மாதிரியாளர்கள் சில நேரங்களில் நேர்மறையாகவும் சில நேரங்களில் எதிர்மறையாகவும் இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். உதாரணமாக இளம்வயதில் தவறான வழியில் செல்லும் இளைஞர்கள் பலரையும் நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இதற்கு அவர்களைச் சுற்றியிருக்கும் சூழ்நிலை, அவர்கள் சந்தித்த நபர்கள் என பல காரணங்கள் இருக்கின்றன.
எனவே ரோல் மாடலாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலேயே நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது.
ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெறும்போது, "இவரைப்போல் வாழ்க்கையில் சாதனை படைக்க வேண்டும்' என்று எண்ணும் இளைஞர்கள் சிலர், அதே சமயம், "இவர் எதிர்கொண்ட கஷ்டத்தை நாம் பெறக்கூடாது' என்றும் நினைக்கிறார்கள்.
இதற்கு மாறாக, வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் நேர்மறையான முன்மாதிரியாளர்களால் மட்டுமே ஈர்க்கப்படுகிறார்கள். மேலும் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலமாக வெற்றிக்கனியைப் பறிக்கின்றனர்.
ரோல்மாடலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட சவால்களைப் பார்த்து, அவற்றின் எதிர்மறையான விளைவுகளைத் தடுக்கவும் அல்லது தவிர்க்கவும் இளைஞர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
சில இளம்வயதினர் தவறான வழிகாட்டுதல்களினால், தவறானவர்களை ரோல் மாடலாக ஏற்று, தவறான பாதையைத் தேர்வு செய்கின்றனர். அந்த நேரத்தில் அவர்களைச் சரியான பாதையில் இட்டுச் செல்வது பெற்றோர்களின், நண்பர்களின் முக்கியமான கடமையாகும்.
மற்றவர்களை ஊக்குவிக்கும் திறன், மதிப்பிடுதல், சமூக அர்ப்பணிப்பு, அனைவரையும் மதிப்பது, தடைகளைச் சமாளிக்கும் திறன் உள்ளிட்டவை முன்மாதிரியாளர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகளாகப் பார்க்கப்படுகின்றன.
குறிக்கோள்களை எட்டுவதற்கு இளைஞர்கள் இம்மாதிரியான முன்மாதிரியாளர்களையே தேர்வு செய்யவேண்டும்.
வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களை மட்டும் கேட்டுப் பெறாமல் தோல்வியுற்றவர்களின் அனுபவங்களையும் தெரிந்து கொள்ளுதல் வெற்றிக்கோ அல்லது தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவத்திற்கோ வழிவகுக்கும்.

முன்மாதிரியாளர்களை இளைஞர்கள் தேர்வு செய்வது எப்படி?:

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியையும் கொண்ட ஒரு நல்ல முன்மாதிரியாளரைத் தேர்வு செய்யுங்கள்.
வெற்றியோ, தோல்வியோ சமமான மனநிலையோடு எதிர்கொண்டு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவராக அவர் இருக்க வேண்டும்.
அனைவரையும் மதிக்கக் கூடியவராகவும், தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
தோல்வியைச் சந்திக்கும் நேரங்களில் அதனைத் திறம்பட எதிர்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்பவராக இருத்தல் வேண்டும்.
தன்னிடம் இருக்கும் அறிவை, அனுபவத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்பவராகவும் அவர் இருக்க வேண்டும். தாழ்வு, மற்றும் உயர்வு மனப்பான்மை உடையவராகவும் முன்மாதிரியாளர்கள் இருக்கக் கூடாது.
மேற்குறிப்பிட்ட குணாதிசயங்கள் கொண்டவர்களை முன்மாதிரியாளர்களாக தேர்வு செய்தால் நீங்களும் வாழ்வில் சாதனை புரியலாம்.
அதேநேரத்தில் முன்மாதிரியாளர் செய்யும் எல்லாவற்றையும் இளம்வயதினர் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

பெற்றோர்களுக்கு...:

இளைஞர்கள் தங்கள் முன்மாதிரியாளரைத் தேர்வு செய்ய பெற்றோர், ஆசிரியர் மற்றும் நல்ல நண்பர்களின் உதவியைப் பெற வேண்டும்.
பெற்றோர் உத்வேகம் தரும் நபர்கள் குறித்து பிள்ளைகளிடம் பேச வேண்டும்.
பெரும்பாலான குழந்தைகளுக்குப் பெற்றோர்களே முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். எனவே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்ல விரும்புபவற்றை தங்களுடைய செயல்களின் மூலமாகக் காட்ட வேண்டும்.

திரைப்படம் வேறு... வாழ்க்கை வேறு:

40 -50 ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படங்களில் குடிப்பது, புகைபிடிப்பது போன்றவற்றை அதிகமாகத் தீயவர்களே செய்வார்கள். சமூகத்தில் குடிப்பது, புகைபிடிப்பது போன்றவை தீய பழக்கங்கள் என்ற கருத்து வலிமையானதாக இருந்தது. எனவே அவற்றைச் செய்ய நினைக்கும் இளைஞர்கள் யாருக்கும் தெரியாமல் மறைவாகச் செய்தார்கள். இப்போது அதற்கு நேர்மாறாக திரைப்படங்களில் காட்டப்படுகின்றன. திறந்த வெளிகளில் மது அருந்துதல், பொது இடங்களில் புகைப்பிடித்தல் எல்லாம் இப்போது திரைப்படங்களிலும், வாழ்க்கையிலும் சாதாரணமாகிவிட்டன. இளம் வயதினருக்கு எவை முன்மாதிரியாகக் காட்டப்படுகிறதோ, அவை அவர்களைப் பற்றிக் கொள்ளும் என்பதற்கு இது உதாரணமாக உள்ளது.
எனவே திரைப்படங்களில் வரும் ஹீரோக்களை தங்களுடைய முன்மாதிரியாளர்களாக ஆக்கிக் கொள்ள விரும்பும் இளம் வயதினரிடம் பெற்றோர் பேச வேண்டும். அதிலுள்ள நன்மை, தீமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். திரைப்படத்துக்கும் உண்மை வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடுகளைத் தெளிவாக இளம் வயதினருக்கு உணர்த்த வேண்டும்.
தவறான முன்மாதிரியாளர்களை இளைஞர்கள் தேர்வு செய்யும்பட்சத்தில் அவர்களைத் திருத்தி சரியான பாதையில் செல்ல பெற்றோர் வழிகாட்ட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT