முகப்பு
மகளிர்மணி

மழை செய்த மாற்றம்!

மழை, மனிதர்களுக்கிடையிலான எல்லா வேறுபாடுகளையும் அழித்துவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வளிக்க உதவிக்கரங்கள் எல்லாத் திசைகளிலும் இருந்து நீண்டு வந்தன.

Updated On : 22 டிசம்பர், 2015 at 10:53 AM
பகிர்:

எதிர்பாராமல் பெய்த அதிக மழை சென்னை, கடலூர் உட்பட தமிழ்நாட்டின் பல ஊர்களை மூழ்கடித்துவிட்டது. உயிரை இழந்தவர்கள், இதுவரை உழைத்துச் சேர்த்து வைத்திருந்த செல்வத்தை இழந்தவர்கள், வாழ்க்கையை இழந்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் வாடிக் கொண்டிருந்தவர்கள் என தமிழ்நாட்டை உலுக்கிவிட்டு சற்று ஓய்ந்திருக்கிறது மழை.

மழை, மனிதர்களுக்கிடையிலான எல்லா வேறுபாடுகளையும் அழித்துவிட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வளிக்க உதவிக்கரங்கள் எல்லாத் திசைகளிலும் இருந்து நீண்டு வந்தன.

 கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆண்டாள் முள்ளிபள்ளம், பெரியபட்டு, கோண்டூர், குடிகாடு, குண்டுப்பாலவாடி, புவனிக்குப்பம் ஆகிய ஊர்களில் நீண்டுவந்த உதவிக்கரங்கள் வித்தியாசமானவை. 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் அப்பகுதி மக்களுக்கு உதவி செய்தனர்.

Advertisement

 மாணவர்களை இந்தப் பணியில் இறக்கிவிட்டவர் கல்வியாளர் கே.ஆர்.மாலதி. சென்னையில் அமமதஞ உஈமஇஅபஐஞசஅக நஉதயஐஇஉந என்ற நிறுவனத்தை நடத்தி வரும் அவருக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடந்து வரும் பள்ளிகளுடன் தொடர்புண்டு.

 ""வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று மாணவர்களிடம் சொன்னபோது முதலில் பிக்னிக் போகும் ஆர்வத்துடன்தான் வந்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் பார்த்த பிறகு அவர்களுடைய மனநிலையே மாறிவிட்டது'' என்கிறார் மாலதி.

 கடலூர் மாவட்ட பகுதிகளில் உதவிக் கரம் நீட்ட வந்த மாணவர்கள் ஏதோ

பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.

""திருச்செந்தூர், திருச்சி, ஹோசூர், தர்மபுரி, துறையூர், முசிறி போன்று தொலைதூரங்களில் உள்ள மாணவர்களை அவர்களுடைய பெற்றோர்களின் அனுமதியுடன் உதவி செய்ய அழைத்து வந்தோம். பாதிக்கப்பட்ட ஆறு ஊர்களும் சாதாரண நாட்களிலேயே போக்குவரத்துக்குச் சற்று சிரமமான ஊர்கள். பாதிக்கப்பட்ட அந்த ஊர்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதும் சிரமம். எனவே நாங்கள் அந்த ஊர் மக்களுக்கு உதவ நினைத்தோம்.

 "ஒரு பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு கிராமத்து மக்களுக்கு உதவ வேண்டும்' என்று திட்டமிட்டுச் செயல்பட்டோம்'' என்கிறார் மாலதி.

 பாதிக்கப்பட்ட ஒரு வீட்டுக்கு என்னென்ன தேவையோ, அவற்றையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். ஸ்டவ், தட்டு, டம்ளர், பாய், போர்வை, பெண்களுக்குத் தேவையான உள்ளாடைகள், நாப்கின்கள், மெழுகுவர்த்தி, அரிசி, பருப்பு என்று தேவையானவை அனைத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

 ""எல்லாரும் உழைத்துப் பிழைத்தவர்கள். யாரிடமும் இதுவரை கையேந்தாதவர்கள். கையேந்தக் கூடாது என்று நினைத்தவர்கள். ஆனால் மழை அவர்களைக் கையேந்த வைத்துவிட்டது. பிறருக்கு உதவி செய்த மாணவர்களின் மனநிலை இதில் முக்கியமானது. வீட்டில் ஸ்கிரீன் இல்லை என்று ஒரு மாணவன் கவலைப்பட்டான். படிக்கிறவர்களுக்கு நோட்டு இல்லை, அவர்களுக்கு நோட்டு, புத்தகம் வாங்கித் தரவேண்டும் என்று சொன்னான், இன்னொரு மாணவன். அவர்களிடம் காசு கொஞ்சம் கூட இல்லை. நாம் அவர்களுக்கு நிறைய காசு கொடுக்க வேண்டும் என்று ஒரு மாணவன் சொன்னான். அவர்களுக்கு வந்ததுபோல் நமக்கும் துன்பம் வந்தால் எப்படி இருக்கும்? என்று அந்தத் துன்பங்களை மாணவர்கள் தங்களுடையதாகப் பார்த்தனர். மக்களுக்கு உதவிய பொருட்கள் அனைத்தும் மாணவர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து கொண்டு வந்தவை'' என்கிறார் நெகிழ்ச்சியுடன் மாலதி.

""வருங்காலத்தில் இயற்கைப் பேரிடர் வந்தால் எப்படிச் செயல்பட வேண்டும்? இயற்கைப் பேரிடர் வராமல் தடுக்க, சுற்றுச்

சூழலை எப்படிப் பாதுகாக்க வேண்டும்? என்பதையெல்லாம் மாணவர்களுக்குக் கற்றுத் தரும், புதிய சுற்றுச்சூழல் பாடத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.  வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட, உடனடித் தேவைக்கு ஏற்றவாறு மாணவர்களைச் செயல்படச் செய்யக் கூடியதாக அது இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட பேரிடர்கள் வந்தால் மாணவர்கள் எளிதில் சமாளிப்பார்கள். இந்தப் பெருமழை ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.  பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை எல்லாருக்கும்  இந்த மழை ஏற்படுத்திவிட்டது'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.