முகப்பு
மகளிர்மணி

கிறிஸ்டல் பாசி தயாரிப்பு பெண்களுக்கு ஏற்ற கைத்தொழில்!

பெண்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே முறுக்கு, அதிரசம்,மசாலாப்பொடி போன்றவைகளைத் தயாரித்து விற்பனை செய்து

Updated On : 14 அக்டோபர், 2015 at 10:39 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:28 PM

பெண்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே முறுக்கு, அதிரசம்,மசாலாப்பொடி போன்றவைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருமானம் பெற்று வருகிறார்கள். மேலும் பலர் தையல் மற்றும் எம்ராய்டரி வேலை செய்வது உள்ளிட்ட கைத்தொழில்களும் செய்து வருகிறார்கள். அந்த வகையில், விருதுநகர் புன்னகை மகளிர் சுயஉதவிக் குழுவினர் கிறிஸ்டல் பாசி, சணல் பை ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகிறார்கள்.

இது குறித்து அக்குழுவின் ஊக்குநர் பி.சசிகலாவிடம் கேட்டபோது:

""மூன்றாண்டுகளுக்கு முன்பு இந்தக் குழு தொடங்கிற்று. தொடங்கிய சில மாதங்களில், மாவட்ட மகளிர் திட்டம் மூலம் "சணல் பை' தயாரிக்க பயிற்சி பெற்றோம்.  மேலும் எங்கள் தயாரிப்புகளை மாவட்ட மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பில் நடைபெறும் விற்பனை மற்றும் கண்காட்சியில் விற்பனையும் செய்ய தொடங்கினோம். ஓரளவுக்கு லாபம் கிடைத்து வந்தது.

Advertisement

2013-இல் மதுரை சித்திரை பொருள்காட்சியில் சணல் பை விற்பனை செய்ய ஒரு அரங்கம் அமைத்திருந்தோம். கல்லூரி மாணவிகள், அலுவலகத்திற்கு செல்லும் பெண்கள் என பலரும் ஆர்வமாக பைகளை வாங்கிச் சென்றார்கள்.

அப்போது பல பெண்கள் கிறிஸ்டல் பாசி கிடைக்குமா என கேட்டார்கள். மேலும் கிறிஸ்டல் பாசி விற்பனை செய்யப்படும் அரங்கில் பெண்கள் பலர் அந்தப் பாசியை ஆர்வமாக வாங்கி செல்வதை கவனித்தோம். அதைத் தொடந்து நாங்களும் கிறிஸ்டல் பாசி தயாரிக்க முடிவு செய்தோம்.

பின்னர் நான்  மதுரை சென்று ஒரு தனியார் நிறுவனத்தில் 20 நாள்கள் பயிற்சி பெற்றேன்.

இதையடுத்து மூலப்பொருள்களை பெங்களூர் மற்றும் சென்னையில் வாங்கி கிறிஸ்டல் பாசி தயாரிக்க தொடங்கினேன். கிறிஸ்டல் பாசியைப்  பயன்படுத்தி ஷார்ட் செயின், லாங் செயின், கொலுசு, வளையல், கம்மல் உள்ளிட்ட பல பெண்கள் விரும்பும் ரகங்களை தயாரிக்கத் தொடங்கினேன். மாவட்ட மகளிர் திட்டம் மூலம் பல ஊர்களில் நடைபெற்ற விற்பனை மற்றும் கண்காட்சியில் அரங்குகள் அமைத்து விற்பனை செய்ததால் நல்ல அனுபவம் கிடைத்தது.

பெண்கள் எந்த ரகங்களை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து பல புதிய ரகங்களை நானே வடிவமைத்து விற்பனை செய்தேன்.  மேலும் பட்டுச் சேலைகளுக்குப் பொருத்தமாக  உள்ள செயின், கம்மல் உள்ளிட்டவைகளையும் செய்ய தொடங்கினேன்.

 இதனை நல்ல தரமான மூலப்பொருள்கள் கொண்டு தயாரித்ததால் அவ்வளவு சீக்கரத்தில் நிறமும் மாங்காது. விழாக்களுக்கு சென்று வந்த பின்னர் கழட்டி பத்திரமாக வைத்துவிட்டால் பல ஆண்டுகள்கூட உழைக்கும். இதனால்  பெண்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

குறைந்த செலவில் பெண்கள் இதன் மூலம் சிறப்பாக அலங்கரித்துக் கொள்ள இயலும். பல பெண்கள் தங்களுக்குத் தேவையான மாடல்களைத் தயாரித்துக் கொடுக்கும்படி கேட்கிறார்கள். அதையும் செய்து கொடுக்கிறேன்.

வீட்டில் இருக்கும் பெண்கள் ஓய்வு நேரத்தில் கிறிஸ்டல் பாசி தயாரித்து தனிநபர் வருமானத்தை பெருக்க இயலும். தற்போது பல குழுக்களுக்கு இது குறித்து பயிற்சியும் அளித்து வருகிறேன்'' என்றார் சசிகலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.