மாங்காய் போளி
தேவையானவை:
முற்றின புளிப்பு மாங்காய் - 1
வெல்லம் - 300 கி
ஏலக்காய் - 6
வென்னிலா எசன்ஸ் - சில துளிகள்
மைதா அல்லது கோதுமை மாவு - 200 கி
பொட்டுக் கடலை பொடி - 1 தேக்கரண்டி
செய்முறை: மாங்காய் துருவலையும், பொடித்த வெல்லத்தையும் சேர்த்து நன்றாகக் கலக்கி கனமான வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து சுருளக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் எசன்ஸ் விட்டு இறக்கி ஆற வைத்து பொட்டுக் கடலைப் பொடித் தூவி சிறுசிறு உருண்டைகளாகக் செய்து கொள்ள வேண்டும். மாவை எண்ணெய்யும் தண்ணீரும் விட்டு பூரி மாவு போன்று பிசைந்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிசைந்த மாவை பூரி போன்று திரட்டி நடுவில் மாங்காய் பூரணம் வைத்து மூடி போளியாக தட்ட வேண்டும். தோசைக் கல் அடுப்பில் காய்ந்ததும் போளி தட்டியதை நெய் விட்டு சுட்டெடுக்க வேண்டும்.
•••
கோதுமை தக்காளிச் சாதம்
தேவையானவை:
சம்பா ரவை - 1/4 கிலோ
வெங்காயம் - 100 கி
தக்காளி - 1/4 கி
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
உப்பு, எண்ணெய் - தேவையானது
செய்முறை: சம்பா ரவையை ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து அரைலிட்டர் தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மிளகாய் வதக்கி நறுக்கிய தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு, கறிவேப்பிலை முதலியவற்றை சேர்த்துத் தண்ணீர்வற்றும் வரை வதக்கி வெந்த சம்பாரவையைக் கலந்து கிளற வேண்டும். மேலே பொடியாக அரிந்த கொத்துமல்லி இலையை தூவிச் சாப்பிடலாம்.
•••
சப்போட்டா கேசரி
தேவையானவை:
பெரிய சப்போட்டா - 4
பால் - 400 மில்லி
பொட்டுக் கடலை மாவு - 2 தேக்கரண்டி
தேங்காய் - 1 மூடி
சர்க்கரை - 100 கிராம்
திராட்சை - 10
கேசரிப் பவுடர் - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
பொடி உப்பு - 1 சிட்டிகை
செய்முறை: பாலை கோவாவாக காய்ச்ச வேண்டும். தேங்காயை துருவ வேண்டும். சப்போட்டாவின் தோலை அகற்றி தேங்காய் திராட்சை இரண்டையும் சப்போட்டாவுடன் சேர்த்து மசிய அரைக்க வேண்டும். சர்க்கரையை கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கம்பிப் பதத்தில் பாகு வந்தவுடன் கோவா, சப்போட்டா, நெய், பொடி உப்பு, கேசரி பவுடர் கலந்து உபயோகிக்க வேண்டும்.
••••
வாழைப்பூ கட்லெட்
தேவையானவை:
பெரிய வாழைப்பூ - 1
வெந்த உருளைக்கிழங்கு - 2
கடலை மாவு - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 6
புளி - 1 சிறு உருண்டை
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையானது
செய்முறை: வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் அரிந்து போட்டு புளியை தண்ணீர் விட்டு கரைத்து வாழைப்பூவை அரிந்து வைத்ததில் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். மசித்த உருளைக் கிழங்கு, கடலைமாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், கறிவேப்பிலை, சோம்பு, சீரகம் முதலிய எல்லாவற்றையும் போட்டு நன்றாகப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.
•••
கோதுமை பருப்பு அடை
தேவையானவை:
உடைத்த கோதுமை - கால் கிலோ
கடலைப் பருப்பு - 50 கி
உளுத்தம் பருப்பு - 50 கி
துவரம் பருப்பு - 50 கி
வெங்காயம் - 100 கி
காய்ந்த மிளகாய் - 5
இஞ்சி - அரைத் துண்டு
தயிர் - 50 கிராம்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையானது.
செய்முறை: உடைத்த கோதுமையை உப்புடன் சேர்த்துத் தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். எல்லா பருப்புகளையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் மசியாதவாறு அரைக்க வேண்டும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு மாவாக தயார் செய்ய வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை அடையாக பரப்பி எண்ணெய் ஊற்றி வெந்தெடுக்க வேண்டும்.
•••
முருங்கைக் கீரை கோலா
தேவையானவை:
முருங்கைக் கீரை - 1 கிண்ணம்
துவரம்பருப்பு - 50 கி
கடலைப் பருப்பு - 50 கி
வெங்காயம் - 50 கி
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை, மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையானவை
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இவற்றை தண்ணீரில் ஊற வைத்து உப்பு, சோம்பு இவற்றைப் போட்டு இட்லி மாவுப் பதத்தில் அரைத்து எடுத்து பட்டை, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசைந்து இட்லித் தட்டில் வைத்து பத்து நிமிடம் வெந்தெடுத்து ஆறியதும் உதிர்க்க வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும், கடுகு தாளித்து வெங்காயம், கீரை இவற்றை வதக்கி உதிர்த்த கோலாவையும் கொட்டி மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்து இறக்க வேண்டும்.
••••
பொரி கடலை தோசை
தேவையானவை:
பச்சரிசி - 200 கி
பொரிகடலை - 200 கி
கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 தேக்கரண்டி
மோர் - 100 மில்லி
கறிவேப்பிலை - 1 பிடி
உப்பு, எண்ணெய் - தேவையானது
செய்முறை: முதலில் பச்சரிசியை ஊறவைத்து முக்கால் பதமாக அரைக்கும் போது பொரி கடலையையும் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். உடனே தோசை செய்ய வேண்டுமானால் மாவுடன் சிறிதளவு மோர் கலந்து கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து கறிவேப்பிலையும் போட்டு கலந்து கொள்ள வேண்டும். தோசைக் கல்லை அடுப்பில் போட்டு காய்ந்ததும் ஒரு தேக்கரண்டி மாவை ஊற்றி சுட்டெடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.