ஹாரியானா மாநிலத்தில் பானிபட் தாலுகாவில் சவுதாப்பூர் என்று ஒரு கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் மொத்த ஜனத்தொகை 12 ஆயிரம். இதில் சுமார் 200-க்கும் அதிகமானோர் வீட்டுக் கணவர்கள்.
அது என்ன வீட்டுக் கணவர்?
மாமியாருடன், நாத்தனாருடன் ஒத்துப் போகாத மருமகள்கள் தங்கள் கணவரையும் அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கே திரும்பி வந்து விடுகின்றனர்!
பெற்றோரும் பெண்ணும் மாப்பிள்ளையும் தங்களுடன் வந்து தங்கிவிட்டனரே என்று நினைப்பதில்லை. மாறாக, அன்புக்கரம் நீட்டி வரவேற்கின்றனர். பெண்ணின் வீட்டுக்கு வரும் மாப்பிளைகள், வீட்டு வேலைகளைச் செய்யவும், சமையல்
வேலைகளைச் செய்யவும் தயங்குவதில்லை.
இந்தக் கிராமம் பானிபட் அருகில் உள்ளதால் வேலை வாய்ப்புகள் அதிகம். காலுறை, உள்ளாடைகள், பின்னலாடைகள், உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகம். இதனால் எளிதில் ஆண், பெண்களுக்கும் வேலை கிடைத்துவிடும். இந்த நிறுவனங்களில் பணியாற்றும் தங்கள் மனைவியருக்கு சில வீட்டுக் கணவர்கள் சமைத்து சுடச்சுட கொண்டு போய் கொடுக்கவும் செய்கின்றனராம்.
வீட்டுக் கணவராக இருந்தாலும் இவர்களில் பலர் சுயமாக நிலம் வாங்கி, வீடு கட்டி, தனியாகக் குடியேறவும் தயங்குவதில்லை. இதுபோன்ற கணவர்களை அந்தக் கிராமத்தில் யாரும் கிண்டலடிப்பதும் இல்லையாம்.