1975 -ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை 20-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்து இடைவெளியில் இருந்த சரிதா, மீண்டும் மகேஷ்குமார் இயக்கத்தில் கன்னடத்தில் உருவாகும் "ஆயோக்யா' என்ற படத்தின் மூலம் நடிக்க வந்துள்ளார்.
ராஜ்குமார், விஷ்ணுவர்தன் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களைத் தந்த சரிதா, 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கன்னடத்தில் நடிக்க வந்தது குறித்து என்ன சொல்கிறார்?
"தற்போது திரையுலகில் அனைத்து மொழிப் படங்களிலும் நல்ல வளர்ச்சியும் காலத்திற்கேற்ற மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும், என்னைப் பொருத்தவரை நான் மாறவில்லை. எந்த மொழிப் படமானாலும் எனக்கேற்ற பாத்திரத்தில் நடிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். நான் முதன்முதலாக திரையுலகில் நுழைந்தபோது வாய்ப்பளித்து எனக்கு ஆதரவளித்த இயக்குநர்களில் பலர் இன்னும் உள்ளனர்.
இயக்குநர் மகேஷ்குமார் தான் இயக்கும் "ஆயோக்யா' படத்தில் எனக்குள்ள பாத்திரத்தைக் கூறியபோது, அது எனக்காகவே உருவாக்கப்பட்டதுபோல் தோன்றவே உடனே ஒப்புக்கொண்டேன். படத்தில் கதாநாயகனாக நடிக்கும் சத்தீஷ் நினாசம்மின் தாயாக நடிக்கிறேன். இன்று பல மொழிகளில் உள்ள இளம் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் என்னை நினைவில் வைத்து நடிக்க வாய்ப்பளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் சரிதா.
- அ. குமார்