சமையல்... சமையல்!
தக்காளி குழம்பு, சுக்கு குழம்பு, பிடிகருணை குழம்பு, வேர்க்கடலை குழம்பு, அரைக்கீரை குழம்பு
தக்காளி குழம்பு
தேவையானவை:
நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2
கீறிய பச்சை மிளகாய் - 1,
பூண்டு - 2 பல்
பொடியாக நறுக்கிய தேங்காய் - சிறிதளவு
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: தக்காளியை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது பொடியாக நறுக்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காயைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாகப் பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், அரைத்தத் தக்காளி விழுது (அ) பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய்ப் பிரிந்து வந்ததும், கொத்துமல்லி தூவி இறக்கவும். தக்காளி குழம்பு ரெடி.
சுக்கு குழம்பு
Advertisement
Advertisement
தேவையானவை:
சுக்கு - ஒரு சிறிய துண்டு
மிளகு - 2 தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை தேக்கரண்டி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
சின்ன வெங்காயம் - ஒரு கிண்ணம்
நறுக்கிய தக்காளி - கால் கிண்ணம்
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: சுக்கு, மிளகு, வெந்தயத்தை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து, ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கி, புளிக் கரைசல் விட்டு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். எண்ணெய்ப் பிரிந்து வரும்போது பொடித்த சுக்கு கலவையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சுக்கு குழம்பு தயார்.
வேர்க்கடலை குழம்பு
தேவையானவை:
வேர்க்கடலை - அரை கிண்ணம் (ஊற வைத்து, வேக வைக்கவும்)
தேங்காய்த் துண்டுகள் - 2 (அரைக்கவும்)
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள் - தலா ஒரு தேக்கரண்டி
புளிக் கரைசல் - ஒரு மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் புளிக் கரைசலை விட்டு அரைத்த தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். வேக வைத்த வேர்க்கடலையைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் தீயைக் குறைத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தூள், கறிவேப்பிலை போட்டு, பொரிந்ததும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பொன்னிறமாக வந்ததும் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும். வேர்க்கடலை குழம்பு தயார்.
பிடிகருணை குழம்பு
தேவையானவை:
பிடிகருணை - கால் கிலோ (வேக வைத்து
தோலுரித்து, வட்டமாக நறுக்கவும்)
சின்ன வெங்காயம் - 10 (ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளவும்)
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - இரண்டரை தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - ஒரு கிண்ணம்
புளி - எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்)
வறுத்து பொடித்த சீரகம் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: அடிகனமானப் பாத்திரத்தில் புளிக் கரைசல், வெங்காயம், சீரகம், கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு போட்டு, எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து மூடி, கொதிக்க வைக்கவும். நன்றாகக் கொதித்ததும் தேங்காய்ப்பால், வேக வைத்த கிழங்கை சேர்த்து மிதமான தீயில் தளதளவென கொதிக்க வைத்து, எண்ணெய்ப் பிரிந்து வந்ததும் இறக்கவும். பிடிகருணை குழம்பு ரெடி.
அரைக்கீரை குழம்பு
தேவையானவை:
அரைக்கீரை - ஒரு சிறிய கட்டு (ஆய்ந்து, கழுவி நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
நாட்டுத் தக்காளி - 4
சின்ன வெங்காயம் - 5
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: பச்சை மிளகாய், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்துக் கொள்ளவும். குக்கரில் கீரை, பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து, மூன்று விசில் வந்ததும் இறக்கி, உப்பு சேர்த்து மத்தினால் நன்றாகக் கடையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் போட்டு, பொரிந்ததும் கீரைக் கலவையில் சேர்த்துக் கடையவும். சுவையான அரைக்கீரை குழம்பு தயார்.
இந்த வாரம் சமையல் குறிப்புகளை வழங்குபவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூ.முத்துலட்சுமி.