முதல் வழக்கே நிர்பயா வழக்குதான்! - வழக்கறிஞர் ஸீமா சம்ரித்தி குஷ்வாகா
மார்ச் 20. கிட்டத்தட்ட எல்லா இந்தியர்களும் குறிப்பாக பெண்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நாள்.
மார்ச் 20. கிட்டத்தட்ட எல்லா இந்தியர்களும் குறிப்பாக பெண்கள் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்ட நாள்.
நிர்பயா பாலியல் வன்முறை குற்றவாளிகள் மார்ச் 20 அன்று அதிகாலை ஐந்தரை மணிக்கு தூக்கிலிடப்பட்டார்கள். தூக்கிலிடுவதற்கு முன்னதாகக் கூட, நள்ளிரவில் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் மரண தண்டனையை உறுதி செய்வதா.. தள்ளிப்போடுவதா என்பது குறித்து விசாரணை நடத்தி இறுதியில் மரண தண்டனையை உறுதி செய்தார்கள்.
வழக்கு சுமார் ஏழு ஆண்டுகள் நடந்தாலும் அந்த காலம் முழுவதும் நிர்பயாவின் பெற்றோர் மகளுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி அழுது கொண்டுதான் இருந்தார்கள். இந்த ஏழு ஆண்டுகளில் அவர்களுக்கு நம்பிக்கைத் தூணாக இருந்தவர் வழக்கறிஞர் ஸீமா சம்ரித்தி குஷ்வாகா. இது குறித்து அவர் கூறுகையில்:
Advertisement
""ஒரு பெரிய சுமையை இறக்கி வைத்த நிம்மதி. நீதி கிடைக்கப் போராடியதில் கிடைத்தது வெற்றி. கண்ணியம் இழக்காமல் கடமை ஆற்றியுள்ளேன். எல்லாவற்றிற்கும் மேலாக "சிதைக்கப்பட்ட நிர்பயாவுக்கும், மனதளவில் பாதிக்கப்பட்ட அவரது தாய்க்கும் நீதி கிடைக்க நான் ஒரு காரணியாக இருந்திருக்கிறேன்' இது எனக்கு மன நிறைவைத் தந்துள்ளது.
"நிர்பயாவும் சரி.. அவரது அம்மாவும் சரி... எனக்கு முன் பரிச்சயம் ஏதும் இல்லை. அவர்கள், நான் வாழும் பகுதியில் வசிப்பவர்களும் அல்ல. "நானும் ஒரு பெண்' என்ற கருத்தியல் காரணமாகவும், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகவும் இந்த வழக்கை ஏற்று நடத்தினேன்.
நான் உத்திர பிரதேச மாநிலத்தில் இட்டாவா நகரத்தைச் சேர்ந்தவள். யமுனை நதிக்கரையோரம் எனது பிறந்த ஊர் அமைந்திருந்தது. எங்கள் ஊரில் பெண்கள் "முசுக்' (முக்காடு) போட்டு முகத்தை மறைக்கணும் என்ற கட்டுப்பாடு இன்றும் உள்ளது.
ஆனால், நான் அப்படி வளரவில்லை. அப்பா விவசாயி. அம்மா படிக்காதவர். ஆனாலும் என்னைப் படிக்க வைத்தார்கள். அருகிலிருக்கும் கான்பூருக்கு ரயிலில் தினமும் சென்று படித்து வந்தேன். பிறகு படிப்பிற்காக டில்லி சென்றேன். படித்துக் கொண்டிருந்தபோது ஐ.ஏ.எஸ் தேர்விற்காக தயார் செய்து பலமுறை தேர்வு எழுதினேன் வெற்றி கிடைக்கவில்லை. நிர்பயா சம்பவம் நடந்ததும்.. இந்தியாவின் பல பாகங்களிலும் எதிர்ப்புகள் வெடித்து கிளம்பின. டில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அந்த தருணத்தில் குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வந்து தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று உறுதி கொண்டேன்.
எனது சட்டப்படிப்பு 2014-இல் நிறைவு பெற்றது. அதிகாரபூர்வமாக வழக்கறிஞர் ஆனதும், நிர்பயா வழக்கை ஏற்றுக் கொண்டேன். விரைவு நீதிமன்றத்தின் வழியாக வழக்கை நடத்தினேன். எனது முதல் வழக்கே நிர்பயா வழக்குதான். அதனால் கட்டணம் ஏதும் வாங்கிக் கொள்ளாமல் வழக்கை நடத்தினேன். கீழ் நீதிமன்றம் முதல், டில்லி உயர் நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றம் என்று வழக்கு பயணித்தது. எதிர்தரப்பு வழக்கறிஞர் அனுபவம் உள்ளவர். திறமையானவர் என்றாலும் ஒவ்வொரு கட்டத்திலும் துணிவோடும் உறுதியுடனும் வாதங்களை ஆணித்தரமாக முன்வைத்தேன்.
"நிர்பயா ஜோதி அறக்கட்டளை' இந்த சமயத்தில்தான் உருவாக்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு சட்ட ஆலோசகராக என்னை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
பீகாரில் பூர்ணியா என்ற ஊரில் பதினோரு வயது சிறுமி ஆறு கயவர்களால் பாலியல் வன்முறைக்கு பலியானாள். 2019 - இல் இந்த அவமான சம்பவம் நடந்துள்ளது. அந்த வழக்கையும் ஏற்று நடத்த முடிவு செய்துள்ளேன்'' என்கிறார் முப்பத்தி மூன்று வயதாகும் ஸீமா சம்ரித்தி குஷ்வாகா.