முகப்பு
மகளிர்மணி

சாதனை புரிய வயது  தடையில்லை!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் சுகாதாரத்துறையில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் ஜோதி கோரிக்கு சிறு வயது முதலே தண்ணீரைக் கண்டால் பயம். அக்வாபோபியா என்ற ஒருவகை அச்ச உணர்வே இதற்கு காரணம்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:


கர்நாடக மாநிலம் பெலகாவியில் சுகாதாரத்துறையில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் ஜோதி கோரிக்கு சிறு வயது முதலே தண்ணீரைக் கண்டால் பயம். அக்வாபோபியா என்ற ஒருவகை அச்ச உணர்வே இதற்கு காரணம். இதன் காரணமாக நீச்சல் பழக துணிவின்றி இருந்த ஜோதிகோரி, 2017 - ஆம் ஆண்டு தனக்குள் எழுந்த துணிவு காரணமாக, நீச்சல் கற்றுக் கொள்ள துணிந்தார்.

பொதுவாக வயதாகும்போது, இளவயதினரைப் போல் நீச்சல் கற்பது சற்று சிரமம் என்றாலும், கல்லூரி நாட்களிலிருந்தே வாழ்க்கையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டுமென்பதில் ஆர்வமாக இருந்த ஜோதி, திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான பின், தன்னுடைய பயத்தை உதறிவிட்டு நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டுமென தீர்மானித்தார். மேலும் 20 ஆண்டுகளாக அரசு பணியில் எவ்வித மாற்றமும் இன்றி, இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததால் தனக்கு ஒரு மாற்றம் தேவை என்றும், இனி வாழும் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமென விரும்பினார்.

தொழிலதிபரான அவரது கணவர் சிவகுமார் கோரியும் அனுமதிக்கவே, தான் மட்டுமின்றி தன்னுடைய 16 மற்றும் 4 வயது மகன்களுடன் நீச்சல் பழக, மூன்றாண்டுக்கு முன் தொழில்முறை நீச்சல் பயிற்சியாளர் சுதிர் ஜோஷில்கர் என்பவரிடம் பயிற்சி பெறத் தொடங்கினார்.

பெலகாவியில் உள்ள ஜே என் எம்சீ நீச்சல் குளத்தில் பயிற்சியைத் தொடங்கிய சில மாதங்களுக்குள், அங்கு புரபஷனலாக நீச்சல் பழகும் வீரர்களுடன் போட்டியிடத் தொடங்கினார் ஜோதி. இவருக்கு பயிற்சியளித்து வந்த சுதிர் ஜோஷில்கரே ஆச்சரியப்படும் வகையில் நீச்சலில் உள்ள ( ப்ரீ ஸ்டைல், பேக் ஸ்ட்ரோக், பிரெல்ட் ஸ்ட்ரோக் உள்பட) அனைத்து பிரிவுகளிலும் திறமையாக நீச்சல் அடிக்க கற்றுக் கொண்டவர், மாநில அளவில் பணிபுரியும் அரசு ஊழியர்களில் 30- 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான நீச்சல் போட்டியில் உற்சாகமாக பங்கேற்கத் தொடங்கினார். அவரது வயதுக்கு போட்டிகளில் கலந்து கொள்வதை கணவரும், மகன்களும் விரும்பவில்லை என்றாலும், பின்னர் நீச்சல் போட்டியில் வெற்றிப் பெறாமல் திரும்பக் கூடாதென்ற மகன்களின் நிபந்தனையுடன் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

வெகு விரைவில் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் அனைத்து மாநில அரசு ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான நீச்சல் போட்டியில் கலந்து கொண்ட ஜோதி, பதக்கங்களை வாங்கி குவித்ததோடு, சர்வதேச அளவில் நடைபெறும் நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்கும் தகுதியைப் பெற்றுள்ளார்.

இதன்படி இந்த ஆண்டு நவம்பர் 6- 15 தேதி வரை ஆஸ்திரேலியா, பசிபிக் கோல்டு கோஸ்ட்டில் நடைபெறும் பான்பசிபிக் கேம்ஸ் மற்றும் 2021- ஆம் ஆண்டு ஜப்பான், கான்சாய் நகரத்தில் நடைபெறவுள்ள வோர்ல்ட் மாஸ்டர் கேம்ஸிலும் பங்கேற்கவுள்ளார்.

குடும்பத்தையும், அரசு வேலைகளையும் கவனித்துக் கொண்டு, அதே நேரத்தில் தன்னம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் கற்றுக் கொண்ட நீச்சலை பயன்படுத்தி போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை புரிந்து வரும் ஜோதி, கடந்த மூன்றாண்டுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். இது தவிர அண்மையில் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த அனைத்து மாநில அரசு ஊழியர் விளையாட்டுப் போட்டிகளிலும், நீச்சல் போட்டியில் மூன்று தங்கங்களையும், தார்வாடில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் ஒரு தங்கமும் வென்றுள்ளார். பணியில் இருந்தாலும், வீட்டு குடும்பத் தலைவியாக இருந்தாலும் சாதனை புரிய வயது ஒரு தடையல்ல என்பதற்கு ஜோதிகோரி முன்னுதாரணமாக விளங்குகிறார் என்பதில் ஜயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.