கரோனாவுக்காக மூடப்பட்ட பள்ளிகள் இன்னமும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கின்றன. அரசு பள்ளிகளில் மத்திய உணவு இலவசமாக வழங்கப்பட்டதும் பல மாதங்களாக நின்றுபோயுள்ளது. தனது வகுப்பில் படித்த மாணவர்களுக்கு இந்தக் கரோனா காலத்தில் உணவளித்து வருகிறார் ஆசிரியை ஜெயமேரி.
"க. மடத்துப்பட்டி சிவகாசியிலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில் உள்ள கிராமம். அங்கே சுமார் 300 குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள்தொகை ஆயிரத்தைத் தொடும். கிராமம் மக்கள் அருகிலுள்ள தீப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்களில் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது தொழில்கள் முடக்கப்பட்டுள்ளதால் கிராமத்தினருக்கு வருமானம் இல்லை.
இந்த ஊரிலுள்ள அரசு தொடக்கப்பள்ளி மூடப்பட்டு இருப்பதால் குழந்தைகளுக்கு மதிய உணவும் கிடைப்பதில்லை. ஆனால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் வகுப்பில் பாடங்கள் நடத்தாமல் இருக்கிற போதும் எனக்கு மாதச் சம்பளம் அரசு வழங்கி வருகிறது. நான் இந்தப் பள்ளியில் இரண்டாம் வகுப்பிற்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். அதனால் எனது வகுப்பில் படித்து வந்த முப்பது மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு சமைத்து வழங்கி வருகிறேன்.
இதர வகுப்பு சிறார்களுக்கும் மதிய உணவு வழங்க முடிவு செய்து எனது முகநூல் பக்கத்தில் எனது எண்ணத்தைப் பகிர்ந்தேன். நல்ல உள்ளம் கொண்ட பலரும் உதவி செய்யத் தொடங்கியுள்ளார்கள். அதனால் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிக்க முடிகிறது. வீட்டில் குழந்தைகளை வரவழைத்து பாடம் சொல்லிக் கொடுத்து படங்கள் வரையவும் பாடவும், ஆடவும் பயிற்றுவிக்கிறேன். வீட்டிற்கு வரும் போது சானிடைசர் கொடுத்து கைகளைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவும், முகக் கவசம் அணியவும் சொல்கிறேன். தவிர சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க அறிவுறுத்துகிறேன். அதனால் கரோனா குறித்த விழிப்புணர்வு குழந்தைகளிடையே ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் விழிப்புணர்வை ஆடலுடன் பாடலுமாகப் பாட பழக்கியுள்ளேன். கிராமத்து மக்களுக்கு மளிகைச் சாமான்களையும் வழங்கி வருகிறேன். எல்லாம் முகநூல் ஆர்வலர்களின் பங்களிப்புதான்.
நான் பத்திரிகைகளில் எழுதுவேன். பட்டிமன்றங்களில் கலந்து கொள்வேன். அதில் வரும் சன்மானங்களை சேர்த்து பள்ளிக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுத்துள்ளேன். அதனால் பசி என்னவென்று எனக்குத் தெரியும். எனது சேவைகளை அங்கீகரித்து தமிழக அரசின் "கனவு ஆசிரியர் விருது 2018' -இல் வழங்கி சிறப்பு செய்தார்கள்'' என்கிறார் ஜெயமேரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.