விளையாட்டு வீராங்கனைகள் சந்தித்துள்ள சவால்கள்!
கடந்த பத்தாண்டுகளாக தொழில்முறையில் இந்திய மகளிர் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள அதிதி சவுஹன், இங்கிலிஷ் லீக் கால்பந்து குழுவில் சேர்ந்து விளையாடிய முதல் இந்தியப் பெண், டாப் டயர் இங்கிலிஷ் கிளப்புட
கடந்த பத்தாண்டுகளாக தொழில்முறையில் இந்திய மகளிர் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள அதிதி சவுஹன், இங்கிலிஷ் லீக் கால்பந்து குழுவில் சேர்ந்து விளையாடிய முதல் இந்தியப் பெண், டாப் டயர் இங்கிலிஷ் கிளப்புடன் விளையாடிய இந்திய தேசிய குழுவில் இடம் பெற்ற முதல் உறுப்பினர் மற்றும் இந்திய தேசிய குழுவில் முதல் வாய்ப்பைப் பெற்ற கோல் கீப்பர் என பல சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் இந்த ஆண்டில் கரோனா காரணமாக மைதானத்தில் பயிற்சி பெறவோ, குறிப்பிடும்படியான போட்டிகளில் பங்கேற்கவோ முடியவில்லையே என்ற வருத்தத்தில் உள்ளார்.
பொதுமுடக்கம் காரணமாக தன் குழுவில் இருந்த மற்ற விளையாட்டு வீராங்கனைகள் போன்று, டெல்லியில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பிய அதிதி, வீட்டிலேயே முடங்கி கிடந்தார். அதிர்ஷ்டவசமாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பி எப்) பணியாற்றிவரும் அதிதியின் தந்தைக்கு குருகிராமில் உள்ள கதார்புர் சிஆர் பி எப் அகாதெமிக்கு பணி மாற்றம் கிடைக்கவே, அங்குள்ள ஜவான்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சி அளிக்கும் கேம்பஸில் மீண்டும் பயிற்சி பெறும் வாய்ப்பு அதிதிக்கு கிடைத்தது.
பயிற்சி மூலம் மீண்டும் உடல் தகுதியை பெற்றாலும், கால்பந்து விளையாட்டில் முறையாக பயிற்சி பெற தன்னுடைய குழுவினர் உடன் இல்லாதது குறையாக இருந்தது. அதிதிக்கு மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் இருந்ததால் டென்னிஸ் பயிற்சிப் பெறத் தொடங்கினார். பொது முடக்கம் மற்றும் கரோனா காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டிருப்பது போல் அதிதியும் பாதிக்கப் பட்டிருந்தாலும், மீண்டும் இந்திய மகளிர் கால்பந்து குழுவில் பயிற்சி பெறவும், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் ஆர்வமாக இருக்கிறார்.
""விளையாட்டு வீராங்கனை என்ற முறையில் தற்போதைய சுற்றுச்சூழல் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டது என்றோ பயப்படத் தேவையில்லை என்றோ கூற நான் விரும்பவில்லை. மீண்டும் குழுவினர் அனைவரும் இணைந்து பயிற்சிப் பெற்று போட்டிகளில் பங்கேற்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. விளையாட்டுத்துறையில் உள்ள பெண்கள் பல தடைகளைத் தாண்டி சாதனை புரிவது போல் இப்போதுள்ள சவால்களையும் எதிர்கொண்டு மீண்டு எழுவோம்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஏ.எப்.சி தகுதி தேர்வு எங்களைப் பொருத்தவரை முக்கியமானதாகும். சீனியர் என்ற முறையில் பல இளம் வீராங்கனைகளைத் தேர்வு செய்வது என்னுடைய பொறுப்பாகும். உலக கோப்பைக்காக யூ17 குழுவினருக்கு பயிற்சியளிக்க வேண்டும். அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி பேசாமல் இருப்பதை விட, இந்திய குழுவில் தொடர்ந்து விளையாடி என்னுடைய நம்பர் ஒன் கோல் கீப்பர் என்ற பெருமையை தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறேன்'' என்கிறார் அதிதி சவுஹன்.