7 - 70 வயது வரை பயிலலாம்!
சமீபத்தில் உஜ்ஜயினியில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் 23 மெடல்கள் பெற்று திரும்பியுள்ளனர் வில்வித்தை வீரர்,
சமீபத்தில் உஜ்ஜயினியில் நடைபெற்ற வில்வித்தைப் போட்டியில் தமிழ்நாடு சார்பில் 23 மெடல்கள் பெற்று திரும்பியுள்ளனர் வில்வித்தை வீரர், வீராங்கனைகள். அந்த வகையில் சென்னை அண்ணாநகரில் உள்ள "வில் ஆர்ச்சரி அகாதெமி'யின் மாணவிகளான ரிடியா, பூர்ணிமா - வெள்ளியும், பிரார்த்தனா, ஓவியா, கனிமொழி ஆகியோர் தங்கமும் பெற்றுள்ளனர். இது குறித்து ஓவியா நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""நான் பத்து வயதிலிருந்து இந்த வில் வித்தையை கற்றுவருகிறேன். என் அப்பாவே வில்வித்தை பயிற்றுநர் என்பதால் ஆரம்பத்தில் விளையாட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லாமல் இருந்தேன். பின்னர், படிப்படியாக இந்த விளையாட்டின் மீது ஆர்வம் அதிகரித்து விளையாடத் தொடங்கினேன். மாவட்ட அளவில், மாநில அளவில் என இதுவரை 100}க்கும் மேல் பதக்கங்கள் பெற்றிருக்கிறேன். இந்த விளையாட்டின் மூலம் எனக்கு கல்லூரியில், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சீட் கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது உஜ்ஜயினியில் நடைபெற்ற விளையாட்டில் தங்கம் வென்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. வருங்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடி பதக்கங்கள் பெற்று பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். அது போன்று ஸ்போர்ட்ஸ் சைக்காலஜிஸ்ட்டாக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது'' என்றார்.
வில்வித்தை பயிற்றுநர் மணிவாசகம் :
சமீபத்தில் உஜ்ஜயினியில் நடைபெற்ற நேஷனல் ஸ்கூல் ஆப் கேம்ஸ். போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 16 டீம்கள் கலந்து கொண்டன. அதில் தமிழ்நாடு சார்பாக விளையாடி நாங்கள் 28 மெடல்களுடன் திரும்பி வந்திருக்கிறோம். வில்வித்தையில், தமிழ்நாடு சார்பில் பதக்கம் வென்று திரும்பி வந்தது இதுதான் முதல்முறை.
அடுத்தகட்டமாக பீல்ட் ஆர்ச்சரி நேஷனல்ஸ் ஆக்ராவில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சார்பில் 55 பேர் கலந்து கொண்டோம். அதில் 23 மெடல் வாங்கி திரும்பியிருக்கிறோம். இதில் எங்களுடைய அகாதெமியில் இருந்து நான்கு பேர் மெடல் பெற்றுயிருக்கிறார்கள். அதில் ரிடியா, ஓவியா தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறார்கள்.
வில்வித்தையை பொருத்தவரை, மற்ற விளையாட்டுகளைப் போன்று கிடையாது. இதில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டுமே விளையாட வருவார்கள்.
குழந்தைகளைப் பொருத்தவரை ஏரோ சூட் செய்யதான் ஆர்வமாவார்கள். இவர்களுக்காக ஆரம்பகட்டத்தில் உள்விளையாட்டு அடிப்படையில் பீல்ட் ஆர்ச்சரியாக தொடங்குகிறோம். இதன் சிறப்பு என்னவென்றால், அம்பு எய்யும் தூரத்தை குறைந்த அளவில் மட்டுமே வைத்திருப்போம். பிறகு மெல்ல மெல்ல தூரத்தை கூட்டுவோம். இதனால் மாணவர்கள் விரைவில் பயிற்சி பெற்று விடுகிறார்கள்.
இப்படி படிப்படியாக அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி பின்னர், இண்டர்நேஷனல் அளவில் விளையாட தயார் செய்கிறோம்.
வில்வித்தை விளையாட்டின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், மற்ற விளையாட்டுகளை விளையாடும்போது உடல் உழைப்பு அதிகம் இருக்கும். அதனால், விளையாடுபவர்கள் விரைவில் சோர்ந்து விடுவார்கள். அதனால் பயிற்சி முடிந்து வீட்டிற்கு சென்றதும் அவர்களால் படிப்பாகட்டும், மற்ற வழக்கமான வேலைகளைக் கூட சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டுதான் செய்ய முடியும். ஆனால், வில்வித்தை பொருத்தவரை உடலை வருத்தி விளையாடக் கூடியது அல்ல. அதனால் பிள்ளைகள் 2 மணிநேரம் விளையாடினாலும் சோர்ந்து போவதில்லை. மேலும், அவர்கள் தங்களது கவனம் முழுவதையும், கூர்மையாக்கி இலக்கை நோக்கி விளையாடுவதால், அவர்களது மூளையும், மனதும் தெளிவாக இருக்கிறது. தற்போது நமது இளம் மாணவர்கள் நிறைய பேர் வில்வித்தையில் திறமையாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல அங்கீகாரம் வேண்டும்.
இந்த விளையாட்டில் மக்களுக்கு இன்னும் அதிகமாக விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக, தற்போது ரெக்கார்ட் பிரேக் செய்ய நினைத்திருக்கிறோம். இதற்காக எங்கள் அகாதெமியின் சார்பில் ஏப்ரல் 12}ஆம் தேதி 4 வயது மாணவரை 4 மணிநேரத்தில் 2020 அம்புகள் எய்ய தயார் செய்து வருகிறோம். இதற்காக "ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' மற்றும் "இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'ஸில் பதிவு செய்ய முயற்சி செய்து வருகிறோம். அது போன்று விரைவில் மலைப்பாங்கான பகுதியில் பீல்ட் ஆர்ச்சரியை தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுக செய்யவுள்ளோம். இதற்கான வேலைகளை தற்போது செய்து வருகிறோம். வில்வித்தையை பொருத்தவரை 7 வயதில் இருந்து 70 வயது வரை உள்ளவர்களும் கற்றுக் கொள்ளலாம்'' என்றார்.
மீனாட்சி சுந்தரி : ""நான் மகரிஷி பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறேன். என் கணவர் வில்வித்தை பயிற்றுநர் என்பதால், அவர், பயிற்றுவிப்பதை பார்த்து பார்த்து அதில் ஆர்வம் ஏற்பட்டு சும்மா விளையாட்டாக நானும் அம்பு எய்து பார்ப்பேன். இதை கவனித்த என் கணவர், எனக்கு முறைப்படி விளையாட சொல்லிக் கொடுத்தார்.
கடந்த பத்து ஆண்டுகளாக நானும் பயிற்சி பெற்று வருகிறேன். 2011}இல் போபாலில் நடைபெற்ற போட்டியில் மாநில அளவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் பெற்றேன். அப்போது எனக்கு வயது 35. பொதுவாக நமது பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள் வைத்துவிடுகிறார்கள். தினசரி வேலைகளுக்கிடையில், தங்களது மனதையும், சிந்தனையையும் தெளிவாக்கிக் கொள்ள பிடித்த விஷயங்களுக்காக கொஞ்ச நேரத்தையாவது தங்களுக்காக ஒதுக்கிக் கொள்ளவேண்டும்.
அதுபோன்று ஒரு டீச்சராக, நான் பார்க்கும் விஷயம் தமிழ்நாட்டைப் பொருத்தவரை படிப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கு கொடுப்பதில்லை. அதனால் பெற்றோர்களுக்கு நான் சொல்லுவது நிச்சயமாக குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டில் சேர்த்து விடுங்கள். அது அவர்களது, மனதையும், ஒழுக்கத்தையும் மேம்படுத்தும் '' என்றார்.