முகப்பு
மகளிர்மணி

108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் பெண் !

தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

Updated On : 16 செப்டம்பர், 2020 at 12:00 AM
பகிர்:


தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அவசர கால மருத்துவ தேவைகளுக்கு, இந்தச் சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள கூடுதல் பளுவையும் திறம்பட சமாளித்துவருகிறது.

இந்த நிலையில், உயிர்காக்கும் 108 அவசரகால ஊர்தி சேவைக்காக மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 90 அவசரகால ஊர்திகள், அரசு ரத்த வங்கிகள் சேவைக்காக 10 ரத்ததான ஊர்திகள், கரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக ழஉஉ நிறுவனம் வழங்கிய 18 அவசரகால ஊர்திகள் என மொத்தம் 118 அவசரகால ஊர்திகளின் சேவையை முதல்வர் பழனிசாமி சமீபத்தில் தொடங்கி வைத்தார்.

அதில், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றுக்கு 30 வயதான பெண் ஓட்டுநர் வீரலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதனால் அரசு ஆம்புலன்ஸ் வாகனமான 108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்வீரலட்சுமி.

Advertisement

இவருக்கு முன்பு, 2018-ஆம் ஆண்டு கயல்விழி என்ற இளம்பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகி சாதனை படைத்தார். அந்த வகையில், பார்த்தால் வீரலட்சுமி இரண்டாவது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆவார். ஆனாலும், அரசு ஆம்புலன்ஸான 108 சேவையில் இணைந்த முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமை வீரலட்சுமிக்கே கிட்டியுள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இதுகுறித்து வீரலட்சுமி கூறுகையில்:

""நான், ஆட்டோமொபைல் இன்ஜினீரிங்கில் டிப்ளமோ பட்டம் பெற்றுள்ளேன். எனக்கு சிறுவயது முதலே கனரக வாகனங்கள் ஓட்டுவதில் விருப்பம் அதிகம். இதனால் கனரக வாகனங்கள் ஓட்டுவதில் பயிற்சிப் பெற்று, ஓட்டுநர் உரிமமும் வாங்கி வைத்துள்ளேன்.

திருமணத்திற்கு பிறகு, குடும்ப பொறுப்புகளை என் கணவருடன் இணைந்து பகிர்ந்து கொள்வதற்காக டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வந்தேன். இந்த சூழ்நிலையில்தான் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஜூன் மாதத்தில் எனக்கு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை வழங்கப்பட்டபோது தமிழகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டும் முதல் பெண் நான் தான் என்பது எல்லாம் எனக்குத் தெரியாது.

கரோனா தொற்று பரவி வரும் காலத்தில் எனக்கு இந்த வேலை வழங்கப்பட்டதை நினைத்து எனது குடும்பத்தினர் கவலைப்பட்டனர். இருந்தாலும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற என் எண்ணத்தைப் பார்த்து சம்மதித்தனர்.

முதல் வாரத்தில், பயிற்சிக்காக சென்றபோது, ஆம்புலன்ஸில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபோது தான் என் வேலையின் தீவிரத்தை உணர்ந்தேன். மேலும் என்னைச் சுற்றியிருந்த ரத்தத்தைப் பார்த்து மிகவும் பயந்தேன். ஆனால் பெரும்பாலான மக்கள் சரியான நேரத்தில் மருத்துவமனையை அடைந்ததால் உயிர் பிழைத்ததைப் பார்த்தபோது மகிழ்ச்சியாகவும், எதையோ சாதித்தது போலவும் உணர்ந்தேன்'' என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.