முகப்பு
மகளிர்மணி

நிறைவேறிய கனவு

இந்திய கூடைப்பந்து வீராங்கனை தமிழகத்தைச் சேர்ந்த அனிதா மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

Updated On : 3 மார்ச், 2021 at 6:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:08 AM

இந்திய கூடைப்பந்து வீராங்கனை தமிழகத்தைச் சேர்ந்த அனிதா மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான அனிதா இந்திய பெண்கள் கூடைப்பந்து அணிக்காக 18 ஆண்டுகள் விளையாடியுள்ளார். இதில் இந்திய அணியின் கேப்டனாக 8 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். ஆசிய கூடைப்பந்து சம்மேளன சாம்பயின் ஷிப்பில் தொடர்ந்து 9 முறையாக பங்கேற்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற சிறப்புக்கு சொந்தகாரர்.

தேசிய கூடைப்பந்து சாம்பியன் ஷிப்பில் 30 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இவரது சொந்த ஊர் திருவேல்வேலி. 

Advertisement

சென்னையில் வசித்து வரும் அனிதாவிடம் பத்மஸ்ரீ விருது கிடைத்த அனுபவம் பற்றி கேட்ட போது சொன்னார்:

""மத்திய அரசு விருது வழங்குவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது குடும்பத்தினருக்கும் மிகுந்த சந்தோஷம். இது போன்ற விருதை பெற வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அந்த கனவு இப்போது நனவாகியுள்ளது. 2012-ஆம் ஆண்டிலிருந்து நான் அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பித்து வருகிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் கடைசி நேரத்தில் கிடைக்காமல் போய்விடும். அர்ஜுனா விருது பெரும்பாலும் தனி நபர் போட்டிகளில் சாதிப்பவர்களுக்கு வழங்கப்படுவதால் வெற்றிக்கனியைப் பறிக்க பல தடைகளை கடக்க வேண்டியது வரும். எல்லா வகையிலும் எனது குடும்பத்தினரும், பயிற்சியாளரும் பக்கபலமாக இருந்தனர். இந்த விருதை மறைந்த எனது தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். இது எனது தந்தையின் கனவு.

இளம் வீராங்கனைகளுக்கு நான் சொல்ல விரும்புவது, பயிற்சியை அர்ப்பணிப்பு மற்றும் விடா முயற்சியோடு செய்ய வேண்டும். அப்போது தான் வெற்றி இலக்கை அடைய முடியும். அதுமட்டுமின்றி பெற்றோர் ஆதரவும் மிகவும் அவசியம்.  என்னால் சாதிக்க முடியும் என்று பெற்றோரை சமாதானப்படுத்த வேண்டும். எனது குடும்பத்தினர் ஆதரவு இருந்ததால்தான் இன்னமும் என்னால் தொடர்ந்து விளையாட முடிகிறது''  என்றார் அனிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.