அமைச்சரான பெண் பத்திரிகையாளர்!
கேரள வரலாற்றில் முதன் முறையாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.
கேரள வரலாற்றில் முதன் முறையாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 140 தொகுதிகளில் 99 இடங்களில் வெற்றி பெற்று பினராயி தலைமையிலான அரசு 2 -ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ளது.
இதில் கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்த வீணா ஜார்ஜ்-க்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வீணா, பத்தனம்திட்டா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினராவார்.
கேரள செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும், களத்தில் செய்தி சேகரிப்பவராகவும் பணியாற்றி இருக்கிறார் வீணா. நடுநிலையான செய்திகளை வழங்கியதால் இவர் பிரபலமானார்.
2012 அமெரிக்கத் தேர்தல் குறித்த செய்திகளை சேகரிப்பதற்காக இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். மலையாள ஊடகத்தில் முதல் பெண் இயக்குநராகவும் இவர் திகழ்ந்திருக்கிறார். 2016-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆரன்முலா தொகுதியில் வெற்றி பெற்று கேரள சட்டப்பேரவைக்குள் அடி யெடுத்து வைத்தார் வீணா.
பத்தனம்திட்டா மாவட்டத்தின் அதே தொகுதியில் இந்த முறை 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். மலைப்பகுதியான ஆரன்முலாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வீணா செய்து வந்த வளர்ச்சிப் பணிகளும், முன்நோக்குத் திட்டங்களின் பலனே அவருடைய தேர்தல் வெற்றிக்கு காரணம்.