கதம்பம்
ஒரு பெண் பிறந்து வளர்ந்து திருமணமாகி தாய்மை அடைந்தபிறகே அவள் முழுமையடைந்த பெண்ணாகிறாள்.
தியேட்டரில் பார்க்கவே விரும்புகிறேன்
""பத்தாண்டுகளுக்கு முன் ஏதாவது ஒரு படத்தில் நடித்தால் போதும் என்ற முடிவுடன்தான் தில்லியிலிருந்து மும்பை வந்தேன். எனது முதல் படமான "கேங்ஸ் ஆஃப் வாசிபுர்' வெற்றியைத் தொடர்ந்து ஹிந்தியில் மட்டுமின்றி வேறு மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சவால்கள் மூலம்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. காலத்தின் மாறுதலுக்கேற்ப திரைப்படங்கள் தியேட்டரிலும், ஓடிடியிலும் வெளியாகின்றன. ஓடிடியில் வெளியாகும் படங்கள் சர்வதேச அளவில் செல்கிறது என்றாலும், என்னுடைய படங்களை தியேட்டரில் பார்க்கவே விரும்புகிறேன். சில படங்களின் திரைக்கதை, தொழில்நுட்பம் தியேட்டரில் பார்க்கும்போதுதான் பிரம்மாண்டமாக தெரியும்'' என்கிறார் ஹியூமா குரோஷி.
தாய்மையை போற்றும் நடிகை!
Advertisement
ஒரு பெண் பிறந்து வளர்ந்து திருமணமாகி தாய்மை அடைந்தபிறகே அவள் முழுமையடைந்த பெண்ணாகிறாள். தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் இன்றியமையாதது. தாய்மையடையும் போது ஏற்படும் மகிழ்ச்சி, மாற்றங்களை அடிப்படையாக வைத்து பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின், "தி எலிபெண்ட் இன் தி வோம்ப்' என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதியுள்ளார். வலேரியா போல்யான்ச்கோ என்பவர் இதற்கு தேவையான ஓவியங்களை வரைந்துள்ளார். பெங்குவின் பதிப்பகம் இப்புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
சாய்னாவைத் தொடர்ந்து அங்கிதா
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ருமேனியாவை சேர்ந்த மிஹிமா பஸர் நெஸ்க்யூ என்ற வீராங்கனையுடன் சேர்ந்து இரட்டையர் பிரிவில் ஆடி வெற்றிப் பெற்றிருக்கிறார். அகமதாபாத்தை சேர்ந்த அங்கிதா ரெய்னா.
சாய்னா மிர்சா, ஷிக்கா உபேராய், நிருபமா வைத்தியநாதன் மற்றும் நிருபமா மன்காட் ஆகிய வீராங்கனைகளைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஏற்கெனவே கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இரட்டையர் பிரிவில் ஆடி வெற்றிப் பெற்ற சாய்னா மிர்சாவை தொடர்ந்து கிராண்ட் ஸ்லாமில் வெற்றிப் பெற்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றுள்ள அங்கிதா ரெய்னா, அண்மையில் லாட்லியாவில் நடந்த போட்டியில் உலகக் குழுவில் இந்தியா சார்பில் பங்கேற்றார்.
துபாயில் சானியா மிர்சா வீட்டிற்குச் சென்று சந்தித்து சில மணி நேரம் பயிற்சிப் பெற்றது மறக்க முடியாத சம்பவம்' என்கிறார் அங்கிதா ரெய்னா.
- அ.குமார் -
உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்!
மங்கோலியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வசித்து வரும் ரெண்ட்சென்கார்லூ பட் எனும் பெண்மணி உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண்மணி என்ற பெருமையினைப் பெற்றிருக்கிறார்.
6 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட இவருடைய பாதத்திலிருந்து இடுப்பு வரையிலான இவரது கால்களின் உயரம் மட்டும் 52.18 அங்குலம் (134.5 செ.மீ) என்றிருக்கிறது. இவரின் பெற்றோர்களுடைய மரபு வழியிலேயே இவரது உயரமும் அதிகமாகியிருக்கிறது. இவரது தந்தை 6 அடி 10 அங்குலம் உயரமும், தாய் 6 அடி 1 அங்குலம் உயரமும் கொண்டவர்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
தனது சிறு வயதில் உயரமாக இருப்பதால், வாசல் கதவுகளில் தலை இடித்துக் கொள்ளுதல், உயரம் குறைந்த அறைகளுக்குள் கூனிக்குறுகி நிற்பது போன்ற பல்வேறு உயரம் தொடர்பான இடையூறுகளோடு, உள்ளூர் மக்களின் கேலி கிண்டல் களுக்கும் ஆளாகி வருத்தமடைந்ததாகக் குறிப்பிடும் இவர், தற்போது தனது உயரமே தனக்கு மிகுந்த அழகைத் தந்திருப்பதாகச் சொல்கிறார்.
""மங்கோலியா, கொரியா உட்பட ஆசிய நாடுகள் எதிலுமே தனக்குச் சரியான அளவு உடையினையோ, காலணியையோ தேர்வு செய்ய முடியவில்லை என்று குறிப்பிடும் இவர், அமெரிக்காவில் தனக்குச் சரியான அளவு உடைகள் கிடைப்பதாகச் சொல்கிறார்.
உயரமான கால்களைக் கொண்டிருப்பதால் தனக்கு விளம்பரப் படங்களில் மாடலாகப் பகுதி நேரமாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதாகக் குறிப்பிடும் இவர், உயரமாக இருப்பது அழகு மட்டுமில்லை, தனக்கென்று தனித்துவத்தையும் தந்திருப்பதாகச் சொல்லி மகிழ்ச்சி அடைகிறார்.
ரஷ்யாவைச் சேர்ந்த எகடெரினா லிசினா எனும் பெண்மணி உலகின் மிக நீளமான கால்களைக் கொண்ட பெண் என்று கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவருக்கு இணையான உயரத்தில் தானிருந்தாலும், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்கு விண்ணப்பிக்க விருப்பமில்லை'' என்கிறார்.
- தேனி மு. சுப்பிரமணி